டெலவர் பள்ளத்தாக்கு: பாரதிதாசன் பிறந்தநாள் விழா
மே 25, 2018 அன்று, அமெரிக்காவின் டெலவர் பள்ளத்தாக்குப் பகுதித் (டெலவர், ஃபிலடெல்ஃபியா மற்றும் தென்ஜெர்சி மாநில) தமிழ் நண்பர்கள் இணைந்து, புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 127வது பிறந்தநாள் விழாவை டெலவரில் சிறப்பாக நடத்தினர்.

விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. மாணவ மாணவியருக்குப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் உருவப்படத்தை முன்னிலைப்படுத்தி ஓவியப்போட்டி, பாவேந்தரின் வாழ்வியல் சார்ந்த வினாடிவினாப் போட்டி ஆகியவை நடைபெற்றன. போட்டிகளில் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.

ஒருங்கிணைப்பாளர் திரு. துரைக்கண்ணன் வரவேற்றுப் பேசினார். விழாவின் முதன்மை நோக்கம் போட்டிகளின் மூலம், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் உருவம், வாழ்க்கை ஆகியவற்றைப் புலம்பெயர்ந்த தமிழ்க்குழந்தைகள் மனதில் பதிய வைப்பதும், அதன் மூலமாகப் பெற்றோர்களையும் அக் கருத்துக்களை உள்வாங்கச் செய்வதுமே என்று விளக்கினார்.

பாரதிதாசனின் "தமிழுக்கும் அமுதென்று பேர்" பாடலை இசையோடு திருமிகு. ரமா ஆறுமுகம் பாடினார். 'பாரதிதாசனும் பெண்ணுரிமையும்' என்ற தலைப்பில் திருமிகு. நெல்லிக்கனி, 'புதியதோர் உலகம் செய்வோம்' என்ற தலைப்பில் ந.க. இராஜ்குமார் ஆகியோர் உரையாற்றினார். நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் திருமிகு செந்தில்நாதன் முத்துசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பாரதிதாசன் குறித்துப் பேருரையாற்றினார். மூதறிஞர் செம்மல் முனைவர் வ.சுப. மாணிக்கனார் அவர்களின் மகள் திருமிகு. தென்றல் அழகப்பன் மற்றொரு சிறப்புவிருந்தினராக வந்திருந்து 'பாரதிதாசன் ஒரு தமிழ்ப்போராளி' என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து பேசிய திருமிகு பிரசாத் பாண்டியன், பாரதிதாசன் எழுச்சிமிகு கவிதைகள் மூலமாகச் சமுதாய ஏற்றத் தாழ்வுகளை நீக்கப் போராடினார் என விளக்கிப் பேசினார்.

போட்டியில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்குச் சிறப்பு விருந்தினர்கள் ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கி ஊக்கினர். நன்றிரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

ந.க. இராஜ்குமார்

© TamilOnline.com