உலகத் தமிழ் கல்விக்கழகம்: பட்டமளிப்பு விழா
விரிகுடாப்பகுதியில் தமிழ் கற்பிக்கும் உலகத் தமிழ் கல்விக்கழகம் 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இப்பள்ளியின் பட்டமளிப்பு விழா நெப்ராடக் வளாகத்தில் மே 27, 2018 ஞாயிறு மதியம் நடந்தேறியது. வழக்கமாகப் பட்டமளிப்பு விழா அந்தந்தக் கிளைகளிலேயே இடம் பெறும். ஆனால் இவ்வாண்டு அனைத்து மாணவர்களையும் ஒரே இடத்தில் அழைத்துப் பட்டமளிப்பு விழாவை நடத்தியது உலகத் தமிழ்க் கல்விக்கழகம்.

மாணவர்கள் பட்டம்பெறும் உடையில் வாத்திய முழக்கத்துடன் அணிவகுத்து வந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்து, பள்ளி வாழ்த்து, அமெரிக்க தேசியகீதத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. திருமதி லதா சண்முகம் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் நித்யவதி மற்றும் ராஜாமணி நிகழ்ச்சிகளின் இடையிடையே தமிழ் இலக்கியம், தமிழ்நாடு, தற்கால இலக்கியம்பற்றிப் பார்வையாளர்களிடம் வினா எழுப்பி, விடையை அடுத்த நிகழ்ச்சியில் அளித்தனர்.

திருமதி சவிதா வைத்யநாதன் (மேயர், கூபர்ட்டினோ), முனைவர். ஸ்வாதி வன்னியராஜன், திரு ஆனந்தகண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். டேவிஸ் பல்கலைக்கழத்தில் சட்டம் பயிலும் பள்ளி முன்னாள் மாணவி செல்வி ரம்யா ஆரோபிரேம் பள்ளிக்கும், நிறுவனர் திருமதி செல்வி ராஜமாணிக்கம் அவர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். மேயர் சவிதா வைத்யநாதன் திருமதி செல்வியின் 20 ஆண்டு சேவையைப் பாராட்டி நினைவுப் பரிசு ஒன்றையும், பள்ளியின் சிறந்த சேவையைப் பாராட்டி அரசுச் சான்றிதழ் ஒன்றையும் வழங்கிச் சிறப்புரை ஆற்றினார். தமிழை விருப்பப்பாடமாகப் படித்த மாணவ மாணவியருக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.

கொலம்பியா பல்கலைக்கழத்தில் சட்டம் பயிலும் பள்ளி முன்னாள் மாணவியும் முதல் பட்டதாரியுமான அஷ்வினி வேல்சாமி பேசுகையில் நாம் இதில் பெற்ற நன்மைகள் பல, இப்பள்ளிக்குத் திரும்ப நாம் என்ன செய்யப் போகிறோம் என்று கேள்வி எழுப்பினார். இப்பள்ளியுடன் என்றும் இணைந்து இருப்போம், அடுத்த தலைமுறை பயனடையச் செய்வோம் என்று அவரே விடையும் கூறினார்.

அடுத்து திரு. கந்தசாமி சிறப்பு விருந்தினர் முனைவர் ஸ்வாதி வன்னியராஜனை அறிமுகப்படுத்தினார். மொழியியலில் UCLA வில் முனைவர் பட்டம் பெற்ற ஸ்வாதி, இரண்டாம் மொழி கற்பதன் அவசியத்தை விளக்கியதோடு அதை எவ்வாறு கற்பிக்கலாம் என்பதையு எடுத்துக் கூறினார். பின்னர் பேசிய சிறப்பு விருந்தினர் ஆனந்தகண்ணன் தமிழ் கற்பித்தலில் என்னென்ன உத்திகளைப் பயன்படுத்தலாம் என்பதை விளக்கினார். வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமல்லாமல், கலைகள் மூலம் மாணவர்களைத் தமிழில் பேசக் கற்பிக்கலாம் என்றார்.

பின்னர், பள்ளியில் பட்டம் பெற்ற எவர்கிரீன் கிளை மாணவி ஸ்ரீநிதி செந்தில்குமார், கூபர்ட்டினோ பள்ளி மாணவி ஐஸ்வர்யா வடிவேல், பிளசன்டன் கிளை மாணவி சங்கவி சுரேஷ்குமார், ஃப்ரீமான்ட் கிளை மாணவியர் சஹானா பரத்வாஜ், விபீதா நந்தகுமார் ஆகியோர் வியக்கும் வகையில் அழகான தமிழில் பேசினர். பட்டம் பெற்றதோடு நில்லாமல் தொடர்ந்து தமிழ் படிப்போம் எனவும் உறுதிகூறிப் பள்ளிக்குப் பெருமிதத்தை ஏற்படுத்தினர். திரு முத்து சுந்தரம் நன்றிகூற நிகழ்ச்சி நிறைவுற்றது.

நித்யவதி சுந்தரேஷ்,
கலிஃபோர்னியா

© TamilOnline.com