பொங்கல் கொண்டாட்டங்கள்: சான் அன்டோனியோ
டெக்சஸ் சான் அன்டோனியோவில் ஜனவரியின் மூன்று வாரங்களும் பொங்களைக் கூடிக் கொண்டாடினர்.

ஜனவரி 14ம் தேதி பொங்கலன்று இந்துக் கோவிலில் பொங்கல் பானை வைத்துப் பொங்கலிட்டனர். ஜனவரி 21ம் தேதி விஜய் டிவி நீயா-நானா புகழ் கோபிநாத்தை நடுவராகக் கொண்டு, “அமெரிக்கா வந்ததும் அதிகம் மாறியது ஆண்களா? பெண்களா?" என்ற தலைப்பில் விவாதித்து அசத்தினர்.

ஜனவரி 27 அன்று, இந்துக் கோவிலில் உள்ள மஹாலக்ஷ்மி ஹாலில் பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. பன்னிரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் சான் அன்டோனியோ தமிழ்ப்பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி இதனைத் தொடங்கினர். சின்னஞ் சிறாரின் நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம், கோலிவுட் நடனம் என வரிசையாக அரங்கேறின. பொங்கல்பற்றி ஒரு சிறுமி மழலையில் அழகாக விளக்கினாள். காதுக்கினிய பியானோ இசையும், நல்ல பாடல்களும் நம்மைக் கட்டிப்போட்டன.

இன்றுள்ள நமது மக்களின் 'விசா' நிலைமையை ராம், வள்ளி மற்றும் பலர் விளக்கியது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. தவிர பாராளுமன்றத்தில் ஓங்கிக் குரல் கொடுக்கவும் வலியுறுத்தினர்.

மாதம் ஒருமுறை சந்தித்து, பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளை விவாதிக்கும் 'திண்ணை' அமைப்பைச் சேர்ந்தோர், டெக்சஸிலேயே முதன்முதலில் தமிழ்ப் புத்தகங்கள் வைத்திருக்கும் ஒரே நூலகம், சான் அன்டோனியோவில் மட்டுமே உள்ளது என்று விளக்கியதில் எங்களுக்கு ஒரே பெருமை. பரதநாட்டியம், சிவதாண்டவம், பொங்கல் நடனங்கள் தொடர்ந்து களைகட்டின. நல்லதொரு நாடகமும் ரசிக்கக் கிடைத்தது. நிர்வாக உறுப்பினர்கள் நன்றி கூற விழா நிறைவடைந்தது.

தலைவர் ராஜகுரு, செயலர் கார்த்திகேயன் பிற பொறுப்பாளர்களோடு சேர்ந்து சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். விழாவின் இறுதியில் சர்க்கரைப் பொங்கலுடன் கூடிய சுவையான இரவு விருந்து தரப்பட்டது.

ஷீலா ரமணன்,
சான் அன்டோனியோ

© TamilOnline.com