பொங்கல் கொண்டாட்டங்கள்: நியூ ஜெர்சி வள்ளலார் தமிழ்ப் பள்ளி
ஃபிப்ரவரி 3, 2018 அன்று நியூ ஜெர்சி வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் பொங்கல் விழா கிரான்பெரி நகரில் நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியர் திரு. சசிகுமார் ரெங்கநாதன் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் ஹம்சா நாராயணன், சமுத்திரா அய்யப்பன் தொகுத்து விழங்கினர். உதவித் தலைமையாசிரியர் இந்து வெங்கட் வரவேற்றுப் பேசினார்.

முதலில் நடந்த மாறுவேடப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு ஆளுமைகளின் வேடமணிந்து குழந்தைகள் உலா வந்தனர். பின்னர் பள்ளி உதவித் தலைமையாசிரியர் சங்கீதா செல்வக்குமார் வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் தொடக்கமும், இலக்கும் குறித்துப் பேசினார்.

அதைத் தொடர்ந்து ஆரம்பநிலை மாணவர்கள் பங்கேற்ற மழலைப் பாடல்கள் போட்டியில் அழ. வள்ளியப்பா, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை ஆகியோர் பாடல்களைக் குழந்தைகள் பாடினர்.

வள்ளலாரின் வாழ்க்கை மற்றும் அன்றைய செய்யுள் போட்டி குறித்து சசிகுமார் ரெங்கநாதன் உரையாற்றினார். தொடர்ந்து நடந்த செய்யுள் போட்டியில் திருவருட்பா, புறநானூறு, குறுந்தொகை, மூதுரை, திருவாசகம், தேவாரம், திருப்பாவை, தேம்பாவணி, சிலப்பதிகாரம், பாரதிதாசன் பாடல்கள் ஆகியவை ஒப்பிக்கப்பட்டன.

பழமொழிகள் போட்டியில் 40க்கும் மேற்பட்ட பழமொழிகளைக் கூறிக் குழந்தைகள் வியக்க வைத்தனர். செந்தமிழும் நாப்பழக்கம் என்பதற்கு இணங்க மாணவர்களின் பேச்சினைச் செம்மைப்படுத்த தமிழ் நாநெகிழ் போட்டி நடைபெற்றது. தொடர்ந்து திராவிட மொழிகள் குறித்த வினாடி வினா நடந்தது. பள்ளி ஆசிரியர் பாண்டியராசன் நாட்டுப்புறப் பாடல் பாடினார்.

போட்டிகளில் 65க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். வெற்றிபெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் மூத்த ஆசிரியர் ஶ்ரீலேகா ரமேஷ் நன்றிகூற விழா நிறைவுற்றது.

செல்வி சசிகுமார்,
நியூ ஜெர்சி

© TamilOnline.com