ஹூஸ்டன்: திருக்குறள் திருவிழா
2017 டிசம்பர் மாதத்தில் டெக்சஸ் மாகாணம் ஹூஸ்டன் மாநகரின் ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப்பள்ளி 'திருக்குறள் திருவிழா' ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் மாணவர்கள் குறள் ஒப்புவித்து, அதன் விளக்கத்தைக் கூறினர். சரியான விளக்கத்தோடு கூறப்பட்ட ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஒரு டாலர், விளக்கமின்றி ஒப்பிக்கப்பட்ட குறள் ஒன்றிற்கு 50 சென்ட் என்கிற வீதங்களில் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. வெவ்வேறு வயதுப் பிரிவுகளில் அதிகக் குறட்பாக்கள் ஒப்புவிக்கும் மாணாக்கர்களுக்கு, அவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று பரிசுகள் பள்ளி ஆண்டுவிழாவில் வழங்கப்படும்.

இந்த ஆண்டு திருக்குறள் திருவிழா, 5 கிளைப்பள்ளிகளிலும் டிசம்பர் 9, 10, 16 தேதிகளில் நடைபெற்றது. 4 வயதிலிருந்து 15 வயதிற்குட்பட்ட சுமார் 300 மாணாக்கர்கள் இவற்றில் பங்கேற்று, மொத்தம் 4603 அமெரிக்க டாலர் தொகையைப் பரிசாகப் பெற்றனர். மொத்தம் 5327 குறட்பாக்கள் ஒப்பிக்கப்பட்டன. 50 மாணாக்கர்கள் 50க்கும் மேற்பட்ட குறட்பாக்களை ஒப்பித்தனர். உச்சமாக 243 மற்றும் 181 குறட்பாக்கள் ஒப்புவிக்கப்பட்டன.

திருக்குறள் திருவிழாவைப் பள்ளி துணைத்தலைவர் திரு. பாலா சிவப்பிரகாசம் தலைமையிலான தன்னார்வலர் குழு சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தியது.

கரு. மாணிக்கவாசகம்,
ஹூஸ்டன், டெக்சஸ்

© TamilOnline.com