காதல் தழும்பு
அண்டசராசரத்தில்
அந்தரத்தில் மிதக்கும்
ஒரு நீலப்பந்தின் மேலொரு தூசு நீ
என அறிவியல் கூறியது.

பல யுகங்கள் கடந்து,
இன்னும் பல காணவிருக்கும் இவ்வுலகில்,
கண்ணிமைக்கும் நேரம்தான் நாம்
எனக் காலம் கூறியது

கடற்கரையில் ஓர் மண்துகள்,
பெருமழையில் ஒரு நீர்த்துளி போல்,
பலகோடி மக்களில் ஒருவன் நீ
எனப் புள்ளிவிவரம் கூறியது.

பல வார்த்தைகள் உன் இதழ்கள் பேசினாலும்,
இன்னும் சில பேசாமலே போனாலும்
என்னை உனக்குப் பிடிக்கும் என
உன் கண்கள் கூறின

இருந்தும்,
மனிதனின் கற்பனையான,
மதமும், ஜாதியும்,
இனமும், மொழியும்,
உறவும், அந்தஸ்தும் பெரிதென
நாம் பிரிந்தோம்.

தண்ணீரில் நனைந்த,
வண்ணச்சித்திரம் போல்,
நாட்கள் செல்லச் செல்ல,
நினைவுகள் தேய்ந்தாலும்,
உன் முகம்மட்டும் என்றும்
என் மனதில்
அழியாத தழும்பாக...

விஜய் சாமி,
உட்பிரிட்ஜ், நியூ ஜெர்சி

© TamilOnline.com