சின்னச் சண்டை
இந்த ஒரு வாரமாக...
எனக்கான தோசையை நானே வார்க்கிறேன்;
கால் வலிக்க நின்றபடியே உண்கிறேன்!
எச்சரிக்கை ஒளி வரும்வரை வண்டி ஓட்டுகிறேன்;
பின் பதட்டத்துடன் பெட்ரோல் தேடி அலைகிறேன்!

திங்கள் விடுமுறை என்பதை மறந்து,
பல்பொருள் அங்காடியில் போய் நிற்கிறேன்!
சாப்பாடு அருமை என்று நீ சொன்னபோது,
பொய்யாக இருக்குமோ என்றெண்ணிய நாட்களுண்டு!

இன்று பொய்யாகவேனும்
ஏதாவது சொல்ல மாட்டாயா?
என, தினம் தினம் ஏங்குகிறேன்!

மாலை நேரத் தேநீர்ப் பொழுதுகளில்
உன் அலுவலகத்தை நீ திட்டிக்கொண்டும்,
என் அலுவலகத்தை நான் திட்டிக்கொண்டும்,
கழிப்போமே, எங்கே அவை?

என் வலியாய்,தேவையாய்,
மறதியாய், ஏக்கமாய், இன்பமாய்,
எல்லாமுமாகிய என் கணவனே!
எதற்கிந்தச் சின்னச் சண்டை நமக்குள்?

ஜெயா மாறன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com