ஜ.ரா. சுந்தரேசன்
பத்திரிகையாளரும், சாகாவரம் பெற்ற அப்புசாமி, சீதாப்பாட்டி கதாபாத்திரங்களை உருவாக்கியவருமான பாக்கியம் ராமசாமி (86) சென்னையில் காலமானார். இயற்பெயர் ஜ.ரா. சுந்தரேசன். (ஜலகண்டபுரம் ராமசாமி சுந்தரேசன்). இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டபுரத்தில் ராமசாமி - பாக்கியம் தம்பதியருக்குப் பிறந்தார். பிரபல பத்திரிகையான குமுதத்தில் 1953ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், அங்கு விதவிதமான புனை பெயர்களில் கதை, கட்டுரை, நாவல், சிறுகதை என்று நிறைய எழுதினார். தமது தாய் தந்தையர்களின் பெயரை இணைத்துப் புனைபெயராகக் கொண்டு, பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் எழுதிய அப்புசாமி - சீதாப்பாட்டி கதைகள் இவருக்குப் பெரும்புகழைத் தேடித்தந்தன. நகைச்சுவைக் கதைகள்தான் என்றில்லாமல் 'கடம்பாவின் எதிரி' போன்ற சமூகக் கதைகளையும் எழுதியிருக்கிறார். இரண்டு ரிக்‌ஷாக்காரர்கள் பேசிக்கொள்வது போன்று சென்னைத் தமிழில் பகவத்கீதையை விளக்கி எழுதியிருக்கும் 'பாமர கீதை' நூல் மிகவும் குறிப்பிடத்தக்கது.

1990ல் பணி ஓய்வு பெற்ற ஜ.ரா.சு. 'அப்புசாமி நாவல்' என்ற பெயரில் மாதநாவல் ஒன்றை வெளியிட்டு வந்தார். இணையம் அறிமுகமானபோது அதிலும் ஒரு வலைத்தளம் தொடங்கி எழுதினார். 'அக்கறை' என்ற அமைப்பை நிறுவி அதன்மூலம் சமூகப் பணிகள் செய்தார். ஃபேஸ்புக்கில் கருத்துக்கள், நகைச்சுவைக் கதை, கட்டுரைகளை எழுதிவந்த இவர் டிசம்பர் 7ம் நாள் காலமானார்.

© TamilOnline.com