இரட்டை அரங்கேற்றம்: மஹதி ஆத்ரேயா, ஹரிஹரன் சண்முகம்
ஜூன் 11, 2017 ஞாயிற்றுக் கிழமை அன்று செல்வி. மஹதி ஆத்ரேயாவின் இசை அரங்கேற்றமும், செல்வன். ஹரிஹரன் சண்முகத்தின் மிருதங்க அரங்கேற்றமும் ஒரே மேடையில், வடக்கு அண்டோவர் உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் நடந்தேறின. மஹதியின் தாத்தா பிரபல இசைக்கலைஞர் சங்கீத சூடாமணி திரு. O.S. தியாகராஜன் தலைமை தாங்கினார். ஹரியின் தங்கை செல்வி. ஹம்ஸா சண்முகம் வரவேற்புரை வழங்கினார்.

மூத்த கலைஞர்கள் திரு. K.V.S. வினய் (வயலின்), திரு. ரவி பாலசுப்பிரமணியன் (கடம்) மேடையில் அமர, 'கமாஸ்' ராகத்தில் 'மாதே' என்ற புகழ்பெற்ற தாரு வர்ணத்தில் தொடங்கியது அரங்கேற்றம். அடுத்து பெ. தூரனின் 'கணநாதனே' சாரங்கா ராகத்திலும், முத்துசாமி தீட்சிதரின் 'சூர்யமூர்த்தே' செளராஷ்டிர ராகத்திலும் தொடர்ந்தன.

ஆரபியில் சுவாதித் திருநாளின் "பாஹி பர்வத நந்தினி" என்ற கீர்த்தனை 'அபிராமி அந்தாதி' விருத்தத்தில் ஆரம்பித்து நிரவல், கல்பனாஸ்வரம், சிறு ஆதிதாள தனியாவர்த்தனம் கலந்துவந்து கச்சேரி சூடு பிடித்தது. வசந்தபைரவி ராகத்தில் தியாகராஜரின் "நீ தய ராதா" என்ற கீர்த்தனையைத் தொடர்ந்து, மையப்பாடலாக, வராளி ராகத்தில் ஷியாமா சாஸ்திரியின் "காமாட்சி" ஆடம்பர ஆலாபனையுடன் பக்திரசம் சொரிந்தது. "சுகஷியாமளே சிவஷங்கரி" என்ற இடத்தில் நிரவல் மற்றும் கல்பனாஸ்வரம் மிக ஸ்வாரஸ்யமான மிஸ்ரசாபு தாள தனியாவர்த்தனம் என கச்சேரி களை கட்டியது.

சிகரமாக, பாபநாசம் சிவனின் "பதுமநாபன் மருகா' என்ற குட்டிக் கீர்த்தனையைத் தொடர்ந்து, மிடுக்குடன் ஸ்ரீரஞ்சனியில் அடுத்து வந்தது ராகம்-தானம்-பல்லவி. இந்தப் பாட்டு-மிருதங்க இரட்டை அரங்கேற்றத்திற்குப் பொருத்தமாக தியாகராஜரின் "சொகசுகா மிருதங்க தாளமு" என்று தொடங்கும் பல்லவி வரியைச் சற்றே மாற்றி, கண்டஜாதி திரிபுட தாளத்தில் இசை அமைத்திருந்தார் அபர்ணா பாலாஜி. விரிவான ஆலாபனை, எழில்மிகு தானம், திரிகால நிரவல். அத்தோடு, நாட்டை, லலிதா, விஜயநாகரி, நளினகாந்தி, மலயமாருதம், ஹம்ஸாநந்தி என்ற ஆறு ராகங்களில் ஆர்வத்தைத் தூண்டும் அதிமதுர ராகமாலிகை கல்பனாஸ்வரம். அருகே ஹரியின் கடினமான, அதிநுட்பமான, அகண்ட, அழகான தனியாவர்த்தனம். சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்த இந்த மனதைக் கொள்ளை கொண்ட பாடலுக்கு அரங்கமே ஆரவாரித்தது.

"நீ மாடலே" (ஜாவளி), "தமரும் அமரும்" (திருப்புகழ்), "தம்பூரி மீட்டிதவ" (புரந்தரதாசர்) என மூன்று துக்கடாப் பாடல்களையும் இனிமையாக வழங்கினர். கடைசியாக லால்குடி ஜெயராமனின் கல்யாண வசந்தம் தில்லானாவைக் கண்டசாபு தாளத்தில் வழங்கிக் கச்சேரியை நிறைவு செய்தார்கள்.

மஹதியின் தாத்தா O.S. தியாகராஜன், ஹரியின் பாட்டி பார்வதி கதிரேசன், மஹதியின் குரு அபர்ணா, ஹரியின் குரு கெளரீஷ், திருமதி. தாரா ஆனந்த் (ஹரியின் பாட்டு குரு), திருமதி. துர்க்கா கிருஷ்ணன் (மூத்த இசை ஆசிரியை) ஆகியோர் பாராட்டிப் பேச, மஹதி மற்றும் ஹரியின் பாட்டு-மிருதங்க அரங்கேற்றம் இனிதே நிறைவடைந்தது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com