ஸ்ரீ லலித கான வித்யாலயா: வெள்ளி விழா
2017 செப்டம்பர் 16-17 நாட்களில் ஸ்ரீ லலித கான வித்யாலயாவின் 25வது ஆண்டுவிழா கொண்டாட்டங்கள், சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இசைத் துறையில் திருமதி. லதா ஸ்ரீராமின் சேவைக்கு இந்த நிகழ்ச்சி ஒரு அர்ப்பணமாகத் திகழ்ந்தது.

இந்த இரண்டு நாள் விழா லதாவின் மகனும் மாணவருமாகிய சித் ஸ்ரீராமின் கர்னாடக இசைக் கச்சேரியுடன் துவங்கியது. அவருக்கு திரு. ப்ரவீண் ஸ்பர்ஷ் மிருதங்கம், திரு. எம். ராஜீவ் வயலினும் வாசித்தனர். கரஹரப்ரியாவில் "பக்கலனிலபடி" அருமையாக இருந்தது. விறுவிறுப்பான கச்சேரி, வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு நல்ல முன்னோடியாக அமைத்தது.

செப்டம்பர் 17 அன்று, வித்யாலயாவின் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் பல்லவி ஸ்ரீராம் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றை வழங்கினார். அதற்கு சித் ஸ்ரீராம் இசை அபாரமாக இருந்தது. திரௌபதி வஸ்த்ராபஹரணக் காட்சியை உள்ளடக்கிய பைரவி பாடல் 'பாலகோபாலா', கருணை மற்றும் முதிர்ச்சியுடன் சித்தரிக்கப்பட்டது. "ரங்கபுரா விஹாரா", "குறை ஒன்றும் இல்லை", அபங்கம், தில்லானா, வர்ணம், ஸ்லோகங்கள் உள்ளிட்ட கிருஷ்ணர் பாடல்களுடன் இந்த நிகழ்ச்சி உருக்கமாக இருந்தது. "பங்கஜலோசன" என்ற பாடல் ஆலாபனை, ஸ்வரங்களுடன் விரிவாகச் சித்திரிக்கப்பட்டது.

இறுதி நிகழ்ச்சியான 'Sid Sreeram Unplugged' எல்லோரும் கலகலப்பாகப் பங்கேற்கும்படி இருந்தது. இதில் பாடப்பட்ட அடியே, மறுவார்த்தை போன்ற பாடல்கள் நன்கு வரவேற்கப்பட்டன. இறுதியில் ஏ.ஆர். ரஹ்மானின் "தாய்மண்ணே வணக்கம்" பாடலை சித் ஸ்ரீராமுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து பாடினார்கள்.

திரு. ஸ்ரீராம் பள்ளியின் 25 ஆண்டுக்கால வளர்ச்சியை நினைவு கூர்ந்து நன்றியுரை ஆற்றினார்.

சுபாஷிணி விஸ்வநாதன்,
சான் ரமோன்

© TamilOnline.com