அரங்கேற்றம்: அனிகா காஞ்சி
அக்டோபர் 7, 2017 அன்று செல்வி. அனிகா காஞ்சியின் பரதநாட்டிய அரங்கேற்றம் கலிஃபோர்னியா சான்ட க்ளாராவில் உள்ள மிஷன் சிட்டி அரங்கில் நடைபெற்றது. குரு திருமதி மைதிலி குமாரின் ஆசிகளுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

தில்லை அம்பலத்தான் குறித்த ஆதிசங்கரரின் வேதசார சிவஸ்தோத்திரத்தில் அடவுகளும் அபிநயங்களும் அனிகாவின் நாட்டியத்தில் அற்புதமாய் மிளிர்ந்தன. ராகமாலிகையில் ஜதிஸ்வரம் பாவராகமாய் மேகவர்ணப் பட்டாடையில் மயிலின் ஒயிலாட்டமாய் மேடையில் விளையாடியது. அடுத்து மதுரை கிருஷ்ணனின் திருமாலின் தசாவதார மகிமையைக் கூறும் நாட்டியம். அதில் மஹாபலி சிரத்தில் கால் வைத்து மண்ணும் விண்ணும் அளந்த விஸ்வரூப தரிசனத்தில் அனிகாவின் ஆடல் மெய்மறக்க வைத்தது. அடுத்து ஆதிசக்தி நாயகி அரக்கரை அழித்தபின் ஆடும் ஆனந்த நடனம். இந்த நாட்டியத்தில் அனிகா சிவனாக ஆண்போல் ஒரு பக்கமும், சக்தியாய் நளினமாக மறுபக்கமும் ஆடியது பரவசப்படுத்தியது. "தீராத விளையாட்டுப் பிள்ளை", "ஸ்மர சுந்தரங்குணி" என்ற ஜாவளி, தில்லானா ஆகியவற்றோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது.

திருமதி ஆஷா ரமேஷ் (வாய்ப்பாட்டு), திருமதி. சாந்தி (வயலின்), திரு. நாராயணன் (மிருதங்கம்), குரு மைதிலி குமார் (நட்டுவாங்கம்) எல்லாமே வெகு சிறப்பு. நாட்டிய அரங்கேற்றம் மூலம் கிடைத்த அன்பளிப்புத் தொகை 2500 டாலரை 'அறம் செய்' என்னும் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக அளித்தார் அனிகா.

பத்மா சபேசன்,
சான்ட க்ளாரா, கலிஃபோர்னியா

© TamilOnline.com