பாரதி தமிழ்ச் சங்கம்: 'சிலப்பதிகாரம்' நாட்டிய நாடகம்
அக்டோபர் 8, 2017 அன்று டப்ளின் ஆர்ட்ஸ் அண்ட் பெர்ஃபார்மென்ஸ் தியேட்டரில் பாரதி தமிழ்ச்சங்கம் 'சிலப்பதிகாரம்' நாட்டிய நாடகத்தை பிரம்மாண்டமாக அரங்கேற்றியது. திரு. மதுரை ஆர். முரளிதரன் இயக்கத்தில், விரிகுடாப் பகுதியிலுள்ள திருமதி. இந்துமதி கணேஷ் அவர்களின் நாட்டியப்பள்ளியான 'நிருத்தியோல்லாசா' இணைந்து இதனை நடத்தியது.

கோவலனாக மதுரை முரளிதரன், கண்ணகியாக செல்வி. அக்ஷயா கணேஷ், மாதவியாக திருமதி. உமா முரளி ஆகியோர் சிறப்பாக நடித்தனர். பரதம் மூலம் கதை சொல்லப்பட்டாலும், கதையின் பின்னணிக் காட்சிகள் டிஜிட்டல் காட்சிகளாக பார்வையாளர்களைக் சிலப்பதிகார காலத்துக்கே கொண்டுசென்றது. இறுதியில் மதுரை எரியும் காட்சி அரங்கமே எரிவது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியது. இத்துடன் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகம், காவடி போன்றவையும் இடம்பெற்றன. கோவலன் கொலையுண்டான் என்றவுடன் கண்ணகி அரற்றும் காட்சி, நீதி கேட்கும் காட்சி, பொற்கொல்லரின் தந்திரம், கோவலனின் இயலாமை, மாதவியின் பிரிவு ஆகிய காட்சிகள் நினைவை விட்டு நீங்காதவை.

கதாபாத்திரத் தேர்வு மற்றும் இயக்கத்தைத் திரு. நவீன் நாதன் சிறப்பாகச் செய்திருந்தார். இவர்களுடன் திருமதி. ஜனனி ஜெயகுமார், திருமதி. தீபா மகாதேவன் ஆகியோரின் மாணவியர் உட்பட நூறுக்கும் மேற்பட்ட விரிகுடாப் பகுதிக் கலைஞர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். ஒப்பனைப் பொருட்கள், வண்ண வண்ண உடைகள், பல்வகை நடனம், முரளிதரனின் பின்னணி இசை ஆகியவை காப்பியத்தை உயிர்ப்போடு நம் கண்முன் கொண்டுவந்தன. பாரதி தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.T.S. ராம் வரவேற்புரை நல்கினார்.

டி.எஸ். ராம்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com