ரொறொன்ரோ: ஏ.ஆர். ரஹ்மான் இசைநிகழ்ச்சி
2017 அக்டோபர் 20-21 தினங்களில் ரொறொன்ரோவில் (கனடா) ஏ.ஆர். ரஹ்மானின் இசைநிகழ்ச்சி பவரேட் சென்டரில் நடைபெற்றன. முதல் நாள் ஹிந்திப் பாடல்கள், இரண்டாவது நாள் தமிழ்ப் பாடல்கள் என ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அக்டோபர் 21 அன்று தமிழ்ப் பாடல் நிகழ்ச்சியில் ரஹ்மான் குழுவைச் சேர்ந்த சித் ஸ்ரீராம், சாஷா திருப்பதி, ஹரிசரண், சேஷாத்ரி, ஜொனிடா காந்தி, பென்னி டயால் ஆகியோர் சிறப்பாகப் பாடினர். ரோஜாவில் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த பாடல்கள்வரை பாடி அசத்தினார்கள். முடிவில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆர்யா கனடா நிறுவனத்தின் அதிபர் கிஷான் நித்தி ரஹ்மானை மேடைக்கு அழைத்தார். ரஹ்மான் சார்பில் பேசிய பாடகர் ஸ்ரீனிவாஸ் ஹார்வர்டில் நிறுவப்பட இருக்கும் தமிழிருக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து அதற்கு நன்கொடை வழங்கப்போவதாக அறிவித்தார். கிஷான் நித்தி, ரஹ்மான், ஸ்ரீநிவாஸ் ஆகியோர் 25,000 டாலர் காசோலையை வழங்க அதை ஹார்வர்டு தமிழ் இருக்கை சார்பாக மருத்துவர் விஜய் ஜானகிராமனும், எழுத்தாளர் அ. முத்துலிங்கமும் கைதட்டலுக்கிடையே பெற்றுக்கொண்டனர். 5000 பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சியூட்டிய இசை நிகழ்ச்சி இனிதே முடிவுக்கு வந்தது.

அ. முத்துலிங்கம்,
ரொறொன்ரோ, கனடா

© TamilOnline.com