அரங்கேற்றம்: ரஞ்சனி ரவீந்திர பாரதி
செப்டம்பர் 03, 2017 அன்று கேம்பல் ஹெரிட்டேஜ் தியேட்டரில் ஆச்சார்ய ரத்னாகரா திரு. நெய்வேலி சந்தானகோபாலனின் 'நெய்வேலி சிஷ்யகுலம்' மாணவி குமாரி ரஞ்சனி ரவீந்திர பாரதியின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் செம்மையாக நடைபெற்றது.

கச்சேரியை ரீதிகௌளை அடதாள வர்ணத்தில் ஆரம்பித்தார். தொடர்ந்து "வாதாபி கணபதிம்" (ஹம்சத்வனி), "எந்தரோ மஹானுபாவலு" (ஸ்ரீராகம்), சந்தானகோபாலன் அவர்கள் எழுதி அமைத்த "பிரத்யக்ஷ பரமேஸ்வர" (பூர்ணசந்திரிகா), "நின்னுவினாக" (பூர்வி கல்யாணி), "ஏதய்யா கதி" (சலநாட்டை), "நீவாடனே காண" (சாரங்கா), "துளசிபில்வ" (கேதாரகௌளை), "நீரத சம" (ஜெயந்தஸ்ரீ), ஆகியவற்றுக்குப் பின் ரஞ்சனி காபி ராகத்தில் ராகம் தானம் பல்லவி பாடினார். ரவீந்திர பாரதி எழுதி சந்தானகோபாலன் இசையமைத்த "ரங்கனை ஸ்ரீரங்கனை பாண்டுரங்கனை" என்ற 30 அக்ஷர பல்லவியை, எவரும் சாதாரணமாகப் பாடாத கடினமான சதுர்முகி கண்ட ஜாதி முகுந்த தாளத்தில் அருமையாகப் பாடி கரகோஷம் பெற்றார் ரஞ்சனி. அங்க தாளத்தில் ஒரு தாளம் முகுந்த தாளம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து குரு சந்தானகோபாலன் இயற்றிய அடாணா ராகத் தில்லானா, அருணகிரிநாதரின் திருப்புகழ் (சங்கராபரணம்), திருப்பாவை "வங்கக்கடல் கடைந்த" (சுருட்டி), மற்றும் மங்களம் பாடிக் கச்சேரியை ரஞ்சனி சிறப்பாக முடித்தார்.

திரு. விட்டல் ராமமூர்த்தி (வயலின்), ரவீந்திர பாரதியின் குருதிரு. நெய்வேலி நாராயணன் (மிருதங்கம்), திரு. சந்திரசேகர் சர்மா (கடம்) ஆகியோர் பக்க வாத்தியம் இசைத்துக் கச்சேரிக்கு மெருகேற்றினர்.

சிறப்பு விருந்தினர் சங்கீதகலாநிதி Dr. திருச்சி சங்கரன், கெளரவ விருந்தினர்கள் திரு. டெல்லி ப. சுந்தரராஜன், சென்னையிலிருந்து திரு. கிளீவ்லான்ட் வி.வி. சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நெய்வேலி சந்தானகோபாலன் ரஞ்சனிக்கு 'நாத சேவிகா' என்ற பட்டம் அளித்து, வாழ்த்திப் பேசினார்.

முதலில் ரஞ்சனியின் தந்தையும் 'நாதோபாஸனா அகடெமி' நிறுவனருமான ரவீந்திர பாரதி, அவரது துணைவியார் ரமா ரவி இருவரும் வரவேற்றுப் பேசினர். திருமதி பத்மா மோகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ரவீந்திர பாரதி, மற்றும் ரஞ்சனியின் நன்றி உரைகளுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.

ரவி ரங்கநாதன்,
கூப்பர்ட்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com