தெரியுமா?: கனடியப் பிரதமர் பங்கேற்ற தமிழர் தெருவிழா
இவ்வருடம் முதன்முதலாக கனடியத் தமிழர் பேரவை நடத்திய தமிழர் தெருவிழாவில் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டு விழாவுக்குப் பெருமை சேர்த்தார். ஆகஸ்ட் 26, 27ம் தேதிகளில் ரொறொன்ரோவின் பிரதான வீதியான மார்க்கம் ரோட்டை இருபக்கமும் அடைத்து நிகழ்த்தப்பட்ட இந்த விழாவில் இரண்டு லட்சம் மக்கள் கலந்துகொண்டது ஒரு வரலாற்று நிகழ்வு.

தமிழ்க் கனடியர் இருப்பைக் கனடியப் பொது நீரோட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியே தமிழர் தெருவிழா என்று சொல்லலாம். தமிழ்ப் பாரம்பரிய நடனங்கள், இசை, தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, கரகாட்டம், சிலம்பாட்டம் போன்றவை விழாவில் முக்கிய இடம்பெற்றன. அத்துடன் இளையோர் பலர் ஹார்வர்டு தமிழ் இருக்கை சம்பந்தமாகச் சனங்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் அவதானிக்க முடிந்தது.

"இலங்கையில் தமிழ் மக்கள் பெரும்பான்மை இனத்தினாலும், அரசாங்கத்தாலும் அடக்கப்படும் நிலைமை மாறவேண்டும். அதற்கான அரசியல் உரிமைச் சட்ட மாற்றங்கள் செய்யவேண்டும் என வலியுறுத்திக் கனடிய அரசு சர்வதேச மட்டத்தில் குரல்கொடுக்கும்" என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்தார். விழாவுக்குத் திரு. சாந்தகுமார் தலைமை வகிக்க திரு. சிவன் இளங்கோ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

1986ம் ஆண்டு 155 தமிழ் அகதிகள் ஒரு படகிலே அட்லாண்டிக் கடலில் தத்தளித்தபோது கனடிய மீன்பிடிக் கப்பல் ஒன்று அவர்களைக் காப்பாற்றி கரைசேர்த்தது. இந்தப் படகு இன்று கனடியத் தமிழரின் சின்னமாக மாறிவிட்டது. இதைக் காட்சிப்பொருளாக வைத்திருந்தார்கள். ஈழத்தமிழர்கள் 56 நாடுகளில் வாழ்ந்தாலும், கனடாவில் அவர்களின் தொகை 4 லட்சத்தை அண்மித்துக் கொண்டிருக்கிறது. 338 உறுப்பினர்களைக் கொண்ட கனடிய நாடாளுமன்றத்தில் ஒரேயொரு தமிழர் அங்கம் வகிக்கிறார். அப்படியிருந்தும், 'இனிவரும் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் கனடாவில் தமிழ் மரபுத் திங்களாகக் கொண்டாடப்படும்' என்ற தீர்மானத்தைச் சமீபத்தில் கனடிய அரசு ஏற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

ஈழத்தமிழர்கள் இன்று கனடாவில் வேற்று இனத்தினர் வியக்கும் வண்ணம் 'தெருவிழா' கொண்டாடுவதும் ஒரு தொடக்கம்தான். இவர்களது அமோக வளர்ச்சி வெகுவிரைவில் உலகத்தினரை பிரமிக்க வைக்கும்.

Click Here EnlargeClick Here Enlarge


அ. முத்துலிங்கம்,
ரொறன்றோ, கனடா

© TamilOnline.com