அரங்கேற்றம்: ஆர்த்தி பாஸ்கரன்
ஜூலை 15, 2017 அன்று ரிச்மண்டில் உள்ள ஹென்ரைகோ தியேட்டரில் செல்வி ஆர்த்தி பாஸ்கரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. ஹென்ரைகோ உயர்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தொடங்க இருக்கும் ஆர்த்தி 'பரத கலைமணி' திருமதி. உமா செட்டி அவர்களின் தலைமையில் இயங்கி வரும் ரிச்மண்ட் 'அப்ஸரஸ் ஆர்ட்ஸ் டான்ஸ் குரூப்' பரதப்பள்ளியில், திருமதி. லக்ஷ்மி வடிவழகு அவர்களிடம் பயில்கிறார்.

நிகழ்ச்சி பாலமுரளிகிருஷ்ணாவின் 'பிறை அணியும் பெருமான்' என்ற ஹம்ஸத்வனி ராக விநாயகர் கிருதியில் தொடங்கியது. தொடர்ந்த கலாக்ஷேத்ரா அரங்கேற்ற ஸ்லோகத்தை அடுத்து, முதல் உருப்படியாக, கம்பீரநாட்டையில் புஷ்பாஞ்சலி செலுத்தினார். பின்னர் ஆரபி ராக முரளீதர கௌத்துவம் ஜதிஸ்வரத்தை அழகாகத் தொடுத்து வழங்கினார். பிறகு தஞ்சாவூர் நால்வர் இயற்றிய வசந்தா ராக ஜதிஸ்வரத்திற்குச் சிறப்பாக ஆடினார்.

ஆர்த்தியும் அவரது குடும்பத்தினரும் சாயிபாபா பக்தர்கள். அதனை பிரதிபலிக்கும் வகையில், 'ஈஸ்வரம்ப பிரிய ' எனத் தொடங்கும், ராகமாலிகை பதத்திற்கு நெகிழ்வுற ஆடினார். 'வேலனைக் காண்போம் வாரீர்' என்று துவங்கும் பதவர்ணத்திற்கு ஆடியது அனைவரையும் கவர்ந்தது. இதில் அவர் வழங்கிய அடவுகளும், சஞ்சாரியும், பாவங்களும் மனதை மகிழ்வித்தது. தொடர்ந்து 'ஸ்ரீசக்ரராஜ' என்று தொடங்கும் ராஜராஜேஸ்வரி ராகமாலிகையை வழங்கினார். 'யாராடினார் இனி எவராடுவார்' என்ற கீர்த்தனை இதனைத் தொடர்ந்தது. இதில் வரும் ஜதிகள் நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பை ஊட்டின. பின்னர் மாண்டுராகத் தில்லானாவுக்கு ஆடினார் ஆர்த்தி. இதன் சரணத்தில் பாரதியாரின் பாடல்வரிகள் இடம்பெற்றிருந்தன.

குரு திருமதி. லக்ஷ்மி வடிவழகு(நட்டுவாங்கம்), திரு. நாராயணன் சுப்ரமணியன் (வாய்ப்பாட்டு), திருமதி. ஆர்த்தி கல்யாணராமன் (வாய்ப்பாட்டு), திரு. ஸ்ரீகாந்த் ராமச்சந்திரன் (மிருதங்கம்), திரு. வினோத் குமார் (புல்லாங்குழல்), திரு. சஞ்சய் ஷர்மா (வயலின்) ஆகியோர் நடனத்திற்குத் தம் இசையால் வலுவூட்டினர்.

நிறைவாக ஆர்த்தியின் நன்றிநவிலல் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. அதில் அவர், பெற்றோருக்காகவோ, ஆசிரியர்களுக்காகவோ, ஊராரைக் கவரவோ இல்லாமல், அரங்கேற்றம் தனக்காக, தம் திருப்திக்காகச் செய்யவேண்டும் என்று நாட்டிய மாணவர்களுக்கு அறிவூட்டியதை பலத்த கரவொலி வரவேற்றது.

அறிக்கை: நாகு பரசு, ரிச்மண்ட், வர்ஜினியா
புகைப்படம்: சூர்யா வடிவழகு

© TamilOnline.com