அரங்கேற்றம்: அம்ருதா ஐயர்
ஆகஸ்ட் 19, 2017 அன்று ஷ்ரூஸ்பரியில் (மாசசூஸட்ஸ்) உள்ள செயின்ட் ஜான் மேனிலைப்பள்ளி கலையரங்கில் செல்வி. அம்ருதா ஐயரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தேறியது. இவரது குரு சங்கீதா விஜய், தனஞ்சயன் தம்பதியினரிடம் பரதம் கற்றவர். இவர் பல உயரிய விருதுகளைப் பெற்றதுடன் பரதகலாஞ்சலியின் 'நாட்டிய பூர்ணா' விருதும் பெற்றவர்.

நிகழ்ச்சி புஷ்பாஞ்சலியுடன் ஆரம்பித்தது. ஜதிஸ்வரத்தைத் தொடர்ந்து பாபநாசம் சிவனின் "ஶ்ரீநிவாச திருவேங்கட" என்ற ஹம்சாநந்தி பாடலுக்கு வேங்கடேசனின் மகிமையைத் தன் நடனத்தில் காண்பித்தார். அடுத்து, கல்யாணி ராக "கோகுலபாலா" பாடலுக்கு இவர் கிருஷ்ண லீலைகளைத் தத்ரூபமாக அபிநயத்தில் காண்பித்தது கண்கொள்ளாக் காட்சி.

பின்னர் ஜெயதேவரின் யமுனாகல்யாணி ராகப் பாடலுக்கு கிருஷ்ணனாகவும் ராதையாகவும் மாறி மாறி ஆடியபோது சிருங்கார ரசம் சொட்டியது. "இடதுபதம் தூக்கி" என்ற கமாஸ் ராகப் பாடலுக்கு இவர் ஆடியபோது இதுவே நடராஜ நர்த்தனமோ எனத் தோன்றியது. அம்ருதாவின் தாத்தாவும், செம்மங்குடி சீனிவாசய்யர் அவர்களின் பிரதம சிஷ்யரும், பிரபல கர்நாடக வித்வானுமான சங்கீத கலா ஆச்சார்யா திரு. வி. சுப்ரமணியம் இசையமைத்த "சாரதாம்பா" என்ற பாடலுக்கு சாரதாம்பாவை முகத்தில் சித்திரித்தது அருமை. நிருத்தத்தின் நாயகமான தில்லானாவில் இவரது பாதங்கள் துள்ளிக் குதித்தன.

மங்களத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. குரு திருமதி சங்கீதா விஜய் (நட்டுவாங்கம்), திரு. சுதேவ் வாரியர் (வாய்ப்பாட்டு), திரு. சுதாமன் சுப்பிரமணியன் (மிருதங்கம்), திரு. ரமணி தியாகராஜன் (புல்லாங்குழல் ரமணியின் மகன், புல்லாங்குழல்), திரு. ஆதித் விஜய் (வயலின்) ஆகியோரின் வாசிப்பு மிகப்பெரிய பக்கபலம்.

அமிர்தாவின் பெற்றோர் ஜெயஶ்ரீ, சங்கர் மற்றும் அமிர்தா வழங்கிய நன்றி உரைகளுடன் நிகழ்ச்சி நிறைவெய்தியது. அமிர்தா சீனியர் பள்ளி மாணவி. ஸாக்கரில் ஆர்வ மிகுதியால் பள்ளி ஸாக்கர் குழுவில் இருப்பதோடு மாசசூஸெட்ஸில் ஸாக்கர் நடுவராகத் தகுதிச் சான்றிதழ் வாங்கி உள்ளார். கராத்தேயில் கறுப்பு பெல்ட் வாங்கி உள்ளார்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com