பேசப்படாதவைகள்
சிகாகோவில் நடந்தது
ஒரு தொடர் மாநாடு!
இந்தியப் பெற்றோர்களின்
கூட்டப்படாத வேனில்கால மாநாடு!

குழந்தைப் பேறுக்கு
வந்த பெற்றோர்
வேலைக்காகப் பிரிந்திருந்த
பிள்ளைகளைப் பார்க்க
வந்த பெற்றோர்
தனித்திருக்கும் பேரப் பிள்ளைகளை
அடைகாக்க
வந்த தாத்தா பாட்டிகள்
அமெரிக்காவைச் சுற்றிப்பார்க்க
வந்த உறவுகள்
கூடிய மாநாடு அது.

தாய்நாட்டில்
திறந்த வெளியில் திரிந்து
பொழுதைக் கழித்தவர்கள்
மூடிய அறைக்குள்
முடங்கிக் கிடக்கும் அவலத்தைப்
பேசிக்கொண்டனர்.

வால்மார்ட்
பட்டேல்
காஸ்ட்கோ
ஐக்கியா
எனத் தாங்கள்
சென்றுவந்த
கடைகளைப் பற்றிப்
பேசிக்கொண்டனர்.

நயகராவின் அசத்தல் அழகை
நியூயார்க்கின் பிரம்மாண்டத்தை
நியூ ஜெர்சியின் கடற்கரை அனுபவத்தை
விஸ்கான்சின் நீர் விளையாட்டை
எல்லாவற்றையும் பற்றிப்
பேசிக்கொண்டனர்.

சிகாகோவின் குளிர்காற்றை
அடிக்கடி நிறம்மாறும் பொழுதுகளை
புதர்ச்செடிகளில் பறித்த செர்ரிகளை
காய்த்துக் குலுங்கிய ஆப்பிள்களை
பறித்து உண்ட சந்தோஷத்தை
எல்லாவற்றையும் பற்றிப்
பேசிக்கொண்டனர்.

ஒருசில நிமிடங்கூட
தங்களோடு பேச நேரமில்லாது
வாரநாட்களில் வேலைக்காகவும்
மாலைப் பொழுதுகளில்
குழந்தைகளின் சிறப்புக் கல்விக்காகவும்
வார இறுதியில்
பொருட்கள் வாங்கவும்
அலையும்
பிள்ளைகளைப் பற்றி மட்டும்
அவர்கள்
பேசிக் கொள்ளவேயில்லை!

நாளும் கூடிப்பிரியும்
அம்மாநாட்டில்
பெற்றோர்கள்
பேசிக்கொண்ட மகிழ்ச்சிகள் ஏராளம்!
பேசிக்கொள்ளாத மனச்சுமைகள்
அதைவிட ஏராளம்!

இரா. பிரேமா

© TamilOnline.com