ஹெச்.ஜி. ரசூல்
கவிஞரும், எழுத்தாளரும், விமர்சகருமான ஹெச்.ஜி. ரசூல் (59) மாரடைப்பால் காலமானார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பிறந்த இவர், இளவயது முதலே இலக்கியத்திலும் மார்க்சீயத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார். கல்லூரிப் பருவத்திலேயே கவிதைகள் எழுதத் துவங்கிவிட்டார். "ஏனில்லை வாப்பா ஒரு பெண் நபி" என்ற இவரது கவிதை மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்காக ஜமாத்தால் ஊர்விலக்கம் செய்யப்பட்டு வாழ்ந்தார். 'மைலாஞ்சி', 'உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள்', 'பூட்டிய அறை', 'ஜனகணமன', 'என் சிறகுகள்' ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள். மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி, மலாய் ஆகிய மொழிகளில் இவரது கவிதைகள் பெயர்க்கப்பட்டுள்ளன. இஸ்லாமியப் பெண்ணியம், தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல், சூபி விளிம்பின் குரல், ஜிகாதி பதுங்கு குழியில் மறைந்திருக்கும் ஒரு சொல் போன்றவை இவரது முக்கியமான ஆய்வுநூல்கள். பின் நவீனத்துவ சிந்தனைகளைக் கொண்ட ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். இஸ்லாத்தில் பெண்களின் நிலையைப்பற்றித் தனது படைப்புகளில் அதிகம் பேசியவர். இவரது 'போர்ஹேயின் வேதாளம்' சமீபத்தில் வந்த முக்கியமான கதைத் தொகுப்பாகும். திறமையுள்ள பிறரை அடையாளம் கண்டு ஊக்குவித்து முன்னிறுத்துவதில் ஆர்வம் கொண்டவர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் குமரிமாவட்டக் கிளையில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்தார். அரசுப்பணியிலிருந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற இவர் மாரடைப்பால் காலமானார்.



© TamilOnline.com