பாஸ்டன்: பாரதி வித்யாஸ்ரமம் ஆண்டுவிழா
நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலயத்தின் கலாசாரப் பள்ளியான பாரதி வித்யாஸ்ரமம் ஆறாம் ஆண்டுவிழாவை ஜூலை மாதத்தில் கொண்டாடியது. புதுமனை புகுவிழாவுடன் சமீபத்தில் விஸ்தரிக்கப்பட்ட பள்ளி அரங்கிலேயே நடைபெற்ற இந்த விழாவில் முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை உள்ள குழந்தைகள் தமிழ், இந்தி, சமஸ்கிருத, ஆங்கில மொழிகளில் இசை, நாடகம், விவாதங்கள் மூலம் தங்கள் ஆற்றல் மற்றும் இந்துசமயத்தைப் பற்றிய தங்கள் அறிவை வெளிப்படுத்தினர். 'பாலகோகுலம்' என்று அழைக்கப்படும் இந்தக் கல்வித்திட்டத்தில் 'துருவா' (மழலையர்), 'நசிகேதா' (வகுப்பு 1-2), 'பிரகலாதா' (வகுப்பு 3-5), 'சங்கர-சாரதா' (வகுப்பு 6-8) என்று நான்கு பிரிவுகள் செயல்படுகின்றன.

"Come Here My Dear Krishna" என்ற பாடலைப் பாடிய 'துருவா' பிரிவு மழலையர் குழந்தைக் கண்ணன் வேடமணிந்து அழகான அபிநயத்தால் அனைவரையும் கவர்ந்தனர். 'நசிகேதா' பிரிவைச் சேர்ந்தவர்கள், "நாகேந்திர ஹாராய திரிலோசனாய" என்ற பாடலை இசைத்தனர். 'பிரகலாதா' பிரிவினர் 'மந்திரபுஷ்பம்' ஓதலுடன் துவங்கி, ராமாயணத்தில் அயோத்தியிலிருந்து இலங்கைவரை ஸ்ரீராமன் சென்ற பாதையை படத்துடன் விளக்கினர். மாரீசனின் சூதால் ஏமாந்த இலக்குவன் ராமனைக் காப்பாற்றுவதற்காக சீதையை காட்டில் தனியாக விட்டு ஓடியது சரியா என்பது போன்ற, ஆழமான கேள்விகளைச் சூடான பட்டிமன்றம் மூலம் 'பிரகலாதா' மாணவர்கள் விவாதித்தனர்.

'சங்கர-சாரதா' பிரிவினர் மகாபாரதக் கருத்துக்கள் இன்றைய சூழ்நிலைக்கு எப்படிப் பொருந்தும் என ஆராய்ந்தனர்.

பாரதி வித்யாஸ்ரமத்தில் வாரந்தோறும் சத்சங்கம் நடத்தும் சுப்புஜீ மற்றும் அன்பர்கள் தமது ஆன்மீக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

வித்யாஸ்ரமத்தின் கர்னாடக இசை வகுப்பில் பயின்ற சிந்து தோனப்புடியின் அரங்கேற்றம் ஜூலை 22ம் தேதியன்று நடைபெற்றது. குரு உஷா துவாரக்கின் சிஷ்யையும் உயர்நிலைப்பள்ளி மாணவியுமான சிந்து, "சலமுசேய" என்ற வலஜி ராக வர்ணத்தில் துவங்கி, "விநாயகா நின்னு" (ஹம்ஸத்வனி), "மாமவது ஸ்ரீ" (ஹிந்தோளம்), "ராமா நின்னு நம்மினா" (மோகனம்), "நித்ய கல்யாணி" (ராகமாலிகை), "மகாலட்சுமி ஜகன்மாதா" (சங்கராபரணம்), "குழலோசை கேட்குதம்மா" (வசந்தா), "ஏமி சேதுரா லிங்கா" (நாட்டுப்புற மெட்டு), "வேங்கடாசலநிலையம்" (சிந்துபைரவி), "கீத துனிக்கு தக" (தனஸ்ரீ தில்லானா) ஆகியவற்றை அற்புதமாகப் பாடி பாராட்டைப் பெற்றார். சமீபத்தில் அரங்கேறிய ஹரி சண்முகம் (மிருதங்கம்), பிரபல வயலின் வித்வான் சூர்யா சுந்தரராஜன் மற்றும் கடவித்வான் டாக்டர். ரவி ஐயர் ஆகியோர் சிறப்பாக பக்கவாத்தியம் வாசித்தனர்.

கலாசார பள்ளி நடத்துவதோடு பாரதி வித்யாஸ்ரமம் ஹார்வர்டு தமிழுருக்கைக்குக் கொடை நடை, உலக சம்ஸ்கிருத தினம், உலக யோகதினம், அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு நிதி திரட்ட சைக்கிள் பேரணி (Bike for Dharma), வறியோர்க்கு உணவளிக்க Project Bread நடத்தும் Walk for Hunger போன்ற சமூகப் பணிகளிலும் ஈடுபடுகிறது.

பாரதி வித்யாஸ்ரமத்தைப் பற்றி மேலும் அறிய

அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி

© TamilOnline.com