கவிஞர் அப்துல்ரகுமான்
வானம்பாடி மரபில் வந்த கவிஞர் அப்துல்ரகுமான் (80), சென்னையில் காலமானார். 1937ல் மதுரையில் பிறந்த இவர், இளவயது முதலே தமிழ்க் காதல் கொண்டிருந்தார். முதுகலைப் படிப்பை நிறைவு செய்தபின், வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். தமிழில் 'கவிதைக் குறியீடுகள்' குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு 'பால்வீதி' 1974ம் ஆண்டு வெளியாகி இவரை அடையாளம் காட்டியது. தொடர்ந்து கவிதை, கட்டுரைகள் எழுதினார்.

'ஆலாபனை', 'பித்தன்' போன்ற படைப்புகள் இவருக்குப் புகழ்சேர்த்தன. 'ஆலாபனை'க்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இவரது கவிதைகள் பாடநூலாக வைக்கப்பட்டன. கவிதைகளில் 'படிமம்' என்ற வகைமையைக் கையாண்டவர். அரேபிய, பாரசீக, உருது மரபு இலக்கியங்களின் தாக்கத்துடன் எழுதியவர். நிறையக் கவியரங்குகளில் பங்கேற்றவர். புதுக்கவிதை பற்றிய இவரது ஆய்வு நூல் குறிப்பிடத்தகுந்தது. தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது போன்ற பல பெருமைகள் பெற்றவர். 'கவிக்கோ' என்று அழைக்கப்பட்டவர்.

கவிஞருக்கு அஞ்சலி!

© TamilOnline.com