பரதம் அகாடமி: 20வது ஆண்டுவிழா
மார்ச் 25, 2017 அன்று பரதம் அகாடமி ஆப் டான்ஸ் ஆர்ட்ஸ் (நேப்பர்வில், இல்லினாய்) தனது இருபதாவது ஆண்டுவிழாவை, ஆஸ்வீகோ ஈஸ்ட் ஹைஸ்கூல் அரங்கில் கொண்டாடியது. குரு திருமதி வனிதா வீரவல்லி அவர்களின் நடன வடிவமைப்பில் மாணவர்கள் கடினமான வர்ணங்கள், சிறப்பு நடனங்கள் முதலியவற்றை மிகச்சிறந்த முறையில் ஆடி மெய்மறக்கச் செய்தார்கள். பரதநாட்டியத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்ற நடனமணி சுதிக்ஷணா வீரவல்லியின் நிருத்யாஞ்சலியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து இளநிலை மாணவர்கள் விநாயகக் கடவுளைப் போற்றி நடனமாடினர். இவர்கள் 'பொம்ம மொம்மத்தா' என்னும் கோலாட்ட நடனம் புதுவிதமாக அமைந்திருந்தது. திருமதி வீரவல்லி அவர்கள் பின்பற்றும் பந்தணைநல்லூர் பாணியில் நடனங்கள் அமைந்திருந்தன.

மூத்த மாணவர்களின் 'ப்ரவாஹம்' நிகழ்ச்சியில் நடனம், வேகம், மகிழ்ச்சி இவைகளின் பிரதிபலிப்பு பிரமாதமான இசையமைப்பில் அதற்க்கேற்றபடி அமைந்திருந்தது. உமையாள் ரோஜா ஸ்வரம் அவர்கள் ஶ்ரீகிருஷ்ணனை வர்ணித்து ஆடிய 'ஒருத்தி மகனாய்', தொடர்ந்த நமிதா ஷெனாய் படைத்த, 'மெல்ல மெல்லனே' என்ற கண்ணனின் லீலைகளை வர்ணிக்கும் ஆடல் இரண்டுமே சிறப்புப் படைப்புகளாகும். குரு வனிதா அவர்கள் தனது மகள்களான சுதிக்ஷணா, ஸாத்விகா, மற்றும் சில பரதமணிகளுடன் மேடையில் சேர்ந்து 'தீராத விளையாட்டுப் பிள்ளை' பாடலுக்கு, கண்ணனின் லீலைகளை, கோபியர் புலம்பல்களைச் சிறந்த அபிநயத்துடன் ஆடிச் சபையோரை ஆட்கொண்டார். நடனமணிகள் தமது அனுபவங்களை நன்றி உரையில் பகிர்ந்துகொண்டார்கள்.

மேலும் விவரங்களுக்கு: www.bharatam.org

தகவல்: அபிஜித் ராயரிகார், அஷ்வின் கே.என்.
தமிழில்: லீலா ராமநாதன்

© TamilOnline.com