நாட்டிய நாடகம்: 'முடிவில் ஒரு ஆரம்பம்'
மே 14, 2017 அன்று சன்னிவேல் நிகழ்கலை மையத்தில் விரஜா மற்றும் ஷ்யாம்ஜித் கிரண் 'முடிவில் ஒரு ஆரம்பம்' என்ற நாட்டிய நாடகத்தைப் படைத்து வழங்கினர். இதில் விரிகுடாப்பகுதி நடனப்பள்ளிகளின் முதுநிலை மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் விரஜா ஷ்யாம்ஜித் கதைக்கருவைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தினார்.

இதில் வரும் மூன்று முக்கியக் கதாபாத்திரங்கள் ஒரு நடனப்பள்ளியில் பயிலும் மாணவியர். அதில் ஒருவரான ஐஸ்வர்யா நடனப் பயிற்சியைத் திரைப்படத் துறைக்கு நுழைவாயிலாகக் கருதுகிறார். ஜனனியோ நடனத்தின் நுணுக்கங்களைக் கற்று, சிறந்த நர்த்தகியாக விரும்புகிறார். அதன்மூலம் ஆன்மாவுக்கு அமைதி கிட்டும் என நம்புகிறார். மூன்றாமவரான ரூபா அங்கு வருவதே பெற்றோரின் வற்புறுத்தலுக்காகத்தான். இவர்களும் துணைப் பாத்திரங்களும் தமது உற்சாகமான, நடிப்பாலும் நாட்டியத்தாலும் நாடகத்துக்கு உயிரூட்டினர். இடையிடையே திரு. மணிராம் சூத்திரதாரியாக வந்து கதையை அடுத்த கட்டத்துக்கு அழகாக நகர்த்தினார்.

வெகு அழகான கர்நாடக இசைப் பின்னணியை ஈஸ்வர் ராமகிருஷ்ணன் மற்றும் குழுவினர் வழங்கினர். நடன வடிவமைத்துத் தயாரித்த விரஜா, ஷ்யாம்ஜித் இருவருமே சென்னை கலாக்ஷேத்ரா முன்னாள் மாணவர்கள். சி.ஏ. ஜாய் உடைகளைச் சிறப்பாக வடிவமைத்திருந்தார். இசையும் நடனமும் கதையம்சமும் ஒன்றோடொன்று போட்டி போட்டிக்கொண்டு ரசிகப் பெருமக்களுக்கு ஓர் அரிய விருந்தாக இந்த நாடகம் அமைந்திருந்தது என்பதில் சந்தேகமில்லை.

ஆங்கில விமர்சனம்: K.R. அருணாசலம், சான் ஹோசே, கலிஃபோர்னியா
தமிழில்: மீனாட்சி கணபதி

© TamilOnline.com