ஜூன் 2017: வாசகர் கடிதம்
அரோரா நகர் வந்துள்ளேன். தென்றல் இதழைப் பார்த்து வியந்தேன். தாங்கள் தமிழுக்கு ஆற்றும் பணி பாராட்டத்தக்கது. தமிழக மண்ணில்கூட இதுபோன்ற இதழ் வெளிவரவில்லை. தமிழர்கள் பாதுகாப்பான உணவு உண்ண வேண்டுமென இயற்கை உணவு உற்பத்தியைத் தமிழகத்தில் எங்கள் இயக்கம் சார்பில் அரசு அங்கீகாரத்துடன் செய்து வருகின்றோம். மக்கள் பயனடைந்து வருகின்றனர். இது குறித்து மேலுமறிய விரும்புவோர் என்னுடன் தொடர்பு கொள்ளலாம்.

கோ. புருஷோத்தமன்,
தலைவர், இயற்கை வேளாண்மை இயக்கம், வேலூர், தமிழ்நாடு

*****


ஏப்ரல், மே மாத இதழ்களில் CalArtsன் முதல் தெற்காசியத் தலைவரான ரவிராஜன் அவர்களின் நேர்காணல் படித்தேன். அவரது முயற்சிகள், எண்ணங்கள் யாவும் அற்புதமாக இருந்தன. வெற்றிக்குக் குறுக்குவழி கிடையாது என்பதும், கடின உழைப்பின் அவசியமும், வாழ்க்கைச் சிக்கலில் இருக்கும் சுவாரஸ்யங்களும், மிகவும் வெற்றிகரமான எவரும் சோம்பேறியாக இருந்ததில்லை என்ற வரிகளும் , அநுபவம் நிறைந்த வார்த்தைகள் என்றால் மிகையில்லை. விசாலமான கண்ணோட்டத்துடன் வித்தியாசமாக விளக்கப்பட்ட 'ஹரிமொழி-மகாபாரதம்' வியக்கவைத்தது.

'ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்' வாழ்க்கை, ஸ்ரீ சத்ய சாயிபாபா கூறிய 'சின்ன கதை' ஆகியவை நன்றாக இருந்தன. 'எத்தனை சதவிகிதம்' என்ற கேள்வியில் அன்புள்ள சிநேகிதி பலவற்றைச் சுலபமாகப் புரிய வைத்துவிட்டார். 'நான் கண்ணாடியை மாத்திட்டேன்' யதார்த்தமான, நடைமுறையில் நடந்தது போன்று அமைந்திருந்தது.

சசிரேகா சம்பத்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா



© TamilOnline.com