நியூ ஜெர்சி: திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி போட்டிகள்
ஃபிப்ரவரி 26, 2017 அன்று நியூ ஜெர்சி திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் சார்பில், குழந்தைகளுக்கான தமிழ்க்கவிதை ஒப்பித்தல், மாறுவேடம் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. எடிசன் நகரில், ஜான் ஆடம்ஸ் நடுநிலைப் பள்ளியில், காலை 9:30 மணிக்குத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. பள்ளித் துணைமுதல்வர் திரு. லக்ஷ்மிகாந்தன் வரவேற்புரை ஆற்றினார். நடுவர்களான திருமதி. மைதிலி மாதவன், திருமதி. ரேவதி சங்கர் மற்றும் திரு. பாலசுப்ரமணியன் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்தார். திரு. செந்தில்நாதன் முத்துசாமி தலைமைப் பொறுப்பேற்று நிகழ்ச்சியை நடத்தினார்.

கிட்டத்தட்ட நூறு குழந்தைகள் போட்டிகளில் பங்குகொண்டனர். 3 முதல் 4 வயது வரையிலான மழலையர் வகுப்பு மாணவர்கள், பாரதியார் பாரதிதாசன், ராணி வேலுநாச்சியார், பால்காரி மற்றும் பல வேடங்கள் பூண்டு கவிதைகள் பாடியும், வசனங்கள் பேசியும் மகிழ்வித்தனர்.

5 முதல் 6 வயது வரையிலான மாணவர்கள், கொன்றை வேந்தனிலிருந்து 15-20 ஒற்றைவரிப் பாக்களைக் மனனம் செய்து ஒருநிமிட நேரத்திற்குள் பிழையின்றி, நல்ல உச்சரிப்புடன் மேடையில் ஒப்பித்தனர். 7 முதல் 8 வயது வரையிலான மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியிலும், 9 முதல் 10 வயது வரையிலான மாணவர்கள், பொருள் விளக்கத்தோடு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியிலும் கலந்துகொண்டனர். அறத்துப்பாலிலிருந்து தேர்வு செய்யப்பட்டிருந்த 20 குறள்களையும், இரண்டு நிமிட நேர அவகாசத்திற்குள் பல மாணவர்கள் சிறப்பாக ஒப்பித்தனர். சுருதி ஆனந்த் என்ற மாணவி 1 நிமிடம் 45 விநாடிகளுக்குள் 27 குறட்பாக்களை ஒப்பித்துச் சாதனை படைத்தார்.

மதியப் போட்டிகளுக்கு நடுவர்களாக திரு. செந்தில்நாதன் முத்துசாமி, திரு. கருப்பையா கணேசன், திருமதி. வித்யா ராம்குமார் பணியாற்றினர்.

11 முதல் 12 வயது வரையிலான மாணவர்கள் பேச்சுப் போட்டியில் பங்கேற்றனர். பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம், ஏறு தழுவுதல், ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் ஆகியவை குறித்து மாணவர்கள் சிறப்பாகப் பேசினர். 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களிலுள்ள கதாபாத்திரங்களுள் ஒன்றைக் குறித்துப் பேசினர். நவீன நோக்கோடு இவற்றை அணுகி, மேலாண்மை சொற்கூறுகளின் துணையோடு பவர்பாய்ண்ட் ஸ்லைடுகள் உதவியுடன் கதாபாத்திரங்களை ஆராய்ந்து விளக்கினர்.

பெரியவர்கள் பங்குகொண்ட 'குழந்தைகளிடம் தமிழ்மொழி, பண்பாட்டை அதிகம் ஊக்குவிப்பது இந்தியாவாழ் பெற்றோர்களா, அமெரிக்காவாழ் பெற்றோர்களா?' என்ற தலைப்பில் திருமதி. சுபா செல்லப்பன் தலைமையில் இரு அணிகள் பங்கேற்றுப் பேசின.

போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கமும், வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களும், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் திருமதி. சாந்தி தங்கராஜ் நன்றியுரை ஆற்ற, நிகழ்ச்சி நிறைவெய்தியது.

பார்த்திபன் சுந்தரம்,
நியூ ஜெர்சி

© TamilOnline.com