அட்லாண்டா: பொங்கல் விழா
ஜனவரி 28, 2017 அன்று அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் டக்கர் குஜராத் சமாஜத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 1300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். கலைநிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், உறியடி மற்றும் நீயா நானா கோபிநாத்தின் விவாதமேடை ஆகியவை இதில் இடம்பெற்றன.

ஜல்லிக்கட்டு ஏன் அவசியம் என்ற தலைப்பில் முன்னாள் தலைவர் ராஜா உரையாற்றினார். தொடர்ந்து ஜல்லிக்கட்டு என்ற கருத்தாக்கத்தில் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

கோபிநாத்தின் விவாதமேடையில் சமூக ஊடகங்களால் நன்மையா தீமையா என்ற தலைப்பு விவாதிக்கப்பட்டது. இளைஞர்கள் சமூக ஊடகங்களை பொறுப்புடன் கையாள்வதாகக் கோபிநாத் கூறினார்.

சுமார் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் உறியடி விளையாடினார்கள். கோலப்போட்டி, சர்க்கரைப் பொங்கல் போட்டிகளும் நடைபெற்றன. சார்லட் நகரச் சிலம்பாட்டக் குழுவினரின் மான்கொம்பு சண்டை மற்றும் சிலம்பாட்டத்தை அனைவரும் ரசித்தனர்.

'பொதுவாக எம்மனசு தங்கம்' பாடல் ஒலிக்க, அமெரிக்கர் கம்பு சுழற்றி ஆடியது பார்ப்பவர்களுக்குப் பரவசமூட்டியது.

இரவு விருந்தில் திருநெல்வேலி ஸ்பெஷல் இருட்டுக்கடை அல்வா வழங்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற இனிப்பகங்களிலிருந்து தருவிப்பதாகவும் இந்த ஆண்டு இருட்டுக்கடை அல்வாவைத் தேர்ந்தெடுத்ததாகவும் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

அண்ணாதுரை,
அட்லாண்டா

© TamilOnline.com