கன்கார்டு முருகன் கோவில்: தைப்பூசப் பாதயாத்திரை
ஃபிப்ரவரி 11, 2017 அன்று, விரிகுடாப்பகுதி கன்கார்டு சிவமுருகன் கோவில் தைப்பூசப் பாதயாத்திரை விமரிசையாக நடந்தேறியது. காலை 6.30 மணிக்கெல்லாம் பக்தர்கள் வாட்டும் குளிரைப் பொருட்படுத்தாமல் சான் ரமோன் மத்தியப் பூங்காவில் கூட ஆரம்பித்தனர். கன்கார்டு முருகனுக்கு அரோகரா என்ற முழக்கத்தோடு, சுமார் 7 மணியளவில் சிறு குழுக்களாக நடக்கத் துவங்கினர்.

வாரக்கணக்கில் கடும்மழை பெய்துகொண்டிருந்த போதும், அந்தத் திருநாளன்று அருமையான தட்ப வெப்ப சூழ்நிலை! ஒன்றரை மணி நேர நடைக்குப் பின்னர் முதல் ஓய்விடம் வந்தது. அங்கே பக்தர்களுக்குக் காலை உணவு பரிமாறப்பட்டது. மீண்டும் யாத்திரயைத் துவங்கினர். மதியம் 11.30 மணிக்கு மதிய உணவு. அது முடிந்து வால்டன் பார்க்கிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், குழந்தைகள் உள்பட, கோவிலை நோக்கிப் புறப்பட்டனர். பக்திப் பாடல்களை பாடிக்கொண்டு யாத்திரை தொடர்ந்தது. சுமார் 2.30 மணியளவில் முதல் குழு கோவிலை அடைந்தது. பக்தர்களின் தேவைகளைக் கவனிக்க, மிதிவண்டியில் ஒவ்வொரு குழுவின் முன்னும் பின்னும் தொண்டர்கள் போய்வந்து கொண்டிருந்தனர்.

சூரபத்மனை வதம்செய்யப் பார்வதி, முருகனுக்கு வேலாயுதத்தைக் கொடுத்த நன்னாளான தைப்பூசத்தின் சிறப்பைக் குறிக்கும் வகையில் சிறப்பான முறையில் வேல் அபிஷேகம் நடைபெற்றது. இரவு உணவுடன் நிகழ்ச்சி நன்றே முடிவடைந்தது.

இதில், தமிழ் பேசுவோர் மட்டுமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உட்பட, இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்களுடன், சீனர், கறுப்பர் மற்றும் வெள்ளையர் சேர்ந்து வந்தது மிகவும் சிறப்பான விஷயம். இதில் கிறிஸ்தவரும் உட்படுவர். வழக்கம்போல், மற்ற மாநிலங்கள், குறிப்பாக வாஷிங்டன் DCயில் இருந்து வந்திருந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகம், ஓரிரு ஆயிரம் பக்தர்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு, உணவு ஏற்பாடு என்று ஆகியவற்றைக் கவனித்து நடத்திக் கொடுத்த தன்னார்வத் தொண்டர் குழு பாராட்டுதலுக்குரியது.

அறுபடை வீடு கொண்ட முருகப் பெருமானின் அமெரிக்க வீடான கன்கார்டு கோவிலில் விஸ்தரிப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அன்பர்கள் இந்தத் திருப்பணிக்கு தத்தம் வசதிக்கேற்ப நிதி வழங்கக் கோரப்படுகிறார்கள்.

கணேஷ் பாபு

© TamilOnline.com