லலிதா சஹஸ்ரநாம கோடியர்ச்சனை
2016 டிசம்பர் 2முதல் 9வரை, கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதியில் உள்ள ஃப்ரீமான்ட் ஹிந்து ஆலயத்தில் ஸ்ரீ லலிதாம்பிகா மஹாமேரு ஸ்ரீசக்ர பிரதிஷ்டையும், கோடி லலிதா சஹஸ்ரநாம பாராயணம், குங்குமார்ச்சனையும் நடைபெற்றன. தினந்தோறும் 'சுவாசினி பூஜை', மகாமேருவு அபிஷேகம், ஆராதனை, நவாவர்ண பூஜைகள் நடைபெற்றன. டிசம்பர் 9 வெள்ளி அன்று நவதுர்கா (கன்யா) பூஜை ஒன்பது சிறுமிகளுக்குச் செய்யப்பட்டது.

இதற்கான முழுமுதல் முயற்சி எடுத்தவர் இவ்வாலயத்தின் பிரதான அர்ச்சகர் திரு. விஸ்வப்ரஸாத் அவர்கள். இதற்காக இந்தியாவில் இருந்து ஆயிரம் பவுண்ட் எடையுள்ள மகாமேருவும் 100 கிலோ மதுரை குங்குமமும் வரவழைக்கப்பட்டன.

தினமும் ஒரு பண்டிதர் சிற்றுரையாற்றினார். திரு. விஸ்வப்ரஸாத் அவர்களுடன் இதே ஆலயத்தைச் சேர்ந்த திரு. குமாரஸ்வாமி மற்றும் திரு. ரவிகாந்த் ஆகியோர் நிகழ்ச்சி சிறப்பாக அமையப் பெரும்பங்காற்றினர். தன்னார்வத் தொண்டர்களுடன், திரு. கோவிந்த் பசுமர்த்தியும் அவரது மனைவி அனிதாவும் விழாவின் வெற்றிக்கு உழைத்தனர். தினமும் இரண்டு வேளை அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னதாக நவம்பர் 5முதல் 28வரை இதே ஆலயத்தில் உள்ள சிவனுக்கு தினமும் ருத்ராபிஷேகமும், அலங்கார ஆராதனைகளும் நடைபெற்றன. அத்துடன் 100,008 ருத்ராட்சங்கள் வைத்துச் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தினந்தோறும் மாலையில் உபந்யாசம், சங்கீதம், பஜனை, நாட்டியம் என்று மிகவும் விமரிசையாக நடந்தன. கந்தசஷ்டியன்று சுவாமி உலா, காவடி எடுத்தல் முதலியனவும் நடைபெற்றன. சங்கீதம், நடனம் முதலியவற்றை விரிகுடாப் பகுதிக் கலைஞர்கள் கலந்து செய்தனர். இதற்கு முன்னின்று ஏற்பாடு செய்தவர்கள் திருவாளர்கள் சரவணப்ரியன் (வயலின் வித்வான்) மற்றும் மாயவரம் சோமசேகர் ஆகியோர்.

ஸ்ரீனிவாசன் கோபாலகிருஷ்ணன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com