அரங்கேற்றம்: சங்கவி குப்புசாமி
நவம்பர் 6, 2016 அன்று ரிச்மண்டில் உள்ள க்லென் ஆலன் கல்சுரல் ஆர்ட்ஸ் சென்டரில் செல்வி. சங்கவி குப்புசாமியின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது. ஹென்ரைகோ உயர்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சங்கவி, திருமதி. உமா செட்டி அவர்களின் ரிச்மண்ட் 'அப்ஸரஸ் ஆர்ட்ஸ் நடனக்குழு' பரதநாட்டியப் பள்ளியில், திருமதி. மீனா வீரப்பனிடம் 10 வருடங்களாகப் பயின்று வருகிறார்.

நிகழ்ச்சி, தஞ்சாவூர் சங்கர ஐயர் இயற்றிய "நீயே கதி கணபதி" என்ற பிள்ளையார் மீதான பந்துவராளி ராகக் கிருதியில் தொடங்கியது. கலாக்ஷேத்ரா அரங்கேற்ற சுலோகத்தை அடுத்து, சுத்தசாவேரி ராகப் பாடலில் சங்கவி, பூமிதேவிக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பின் ஆரபி ராகத்தில் அமைந்த ஜதிஸ்வரத்தை மிக அழகாக வழங்கினார். தஞ்சாவூர் நால்வரின் கௌளை ராக சுப்ரமணிய கௌத்துவம், லால்குடி ஜெயராமனின் 'அங்கயற்கண்ணி' ராகமாலிகை பதவர்ணம், ராகமாலிகையில் ஆண்டாளின் 'வாரணம் ஆயிரம்' என்று தொடங்கும் நாச்சியார் திருமொழி என்று அடுத்தடுத்து வந்தவை சங்கவியின் திறமைக்குச் சான்று பகர்ந்தன.

குரு மீனா வீரப்பன் இயற்றிய ஷண்முகப்ரியா ராகத்திலமைந்த நடராஜர்மீதான "அண்டம் பிண்டம்" என்ற பாடலைச் சங்கவி அரங்கேற்றினார். இந்தப் பாடலுக்கு டாக்டர். ஆனந்த பாலயோகி பவனானி இசையமைத்திருந்தார். அடுத்ததாக பாலயோகி எழுதிய சாரங்கா ராகத்திலமைந்த 'அழகு ராமன்' என்ற பாடலுக்குச் சங்கவி நாட்டியம் ஆடினார். ராமாயணத்தில் வரும் நிகழ்ச்சிகளை அழகாக இப்பாடல் வெளிப்படுத்தியது.

கமாஸ் ராகத் தில்லானாவை அடுத்து, குரு மீனா வீரப்பன் எழுதிய 'முக்கண்ணன் புதல்வன்' என்று தொடங்கும் மங்களத்துடன் நிகழ்ச்சியை நிறைவுக்குக் கொண்டுவந்தார்.

நிகழ்ச்சியில் இசைக்குழுவினர்: குரு திருமதி மீனா வீரப்பன் (நட்டுவாங்கம்), திரு. நாராயணன் சுப்ரமணியன் (வாய்ப்பாட்டு), திருமதி ஆர்த்தி கல்யாணராமன் (வாய்ப்பாட்டு), திரு. விஜய் கணேஷ் (மிருதங்கம்), திரு. பார்த்தா ஆஜி (புல்லாங்குழல்), திரு. சுவாமிநாதன் நடராஜன் (வயலின்). சங்கவி வழங்கிய நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவெய்தியது.

நாகு பரசு,
ரிச்மண்ட், வர்ஜினியா

© TamilOnline.com