ஹம்சத்வனி: இசைநிகழ்ச்சி
ஆகஸ்ட் 20, 2016 அன்று இந்து நாகராஜன் நிறுவியுள்ள 'ஹம்சவத்னி'யின் ஆதரவில், சான் டியகோ இரட்டையர்கள் கிரண் - நிவி சகோதரிகளின் கச்சேரி நடைபெற்றது. இருவருமே டாக்டர் சி.எம். வெங்கடாசலம், காயத்ரி வெங்கட்ராகவன், மேலக்காவேரி பாலாஜி ஆகியோரிடம் பயின்றார்கள்.

சியாமா சாஸ்திரியின் 'சங்கரி சங்குரு'வுடன் கச்சேரி ஆரம்பமாயிற்று. 'மாருபல்க'வில் ஸ்ரீரஞ்சனி ராகத்தை அநாயசமாகக் கையாண்டார்கள். ஆஹிரி ராகத்தில் 'மாயம்மா'வைப் பாடிவிட்டு, 'காப்பதுவே' என்கிற ஆனந்தபைரவி ராகக் கீர்த்தனையைப் பாடினார்கள். 'பஜரே ரேசித்த' என்கிற கல்யாணிராகப் பாட்டு ஆலாபனை, நிரவல், ஸ்வரங்கள் என அனைத்தும் சிறப்பாக இருந்தன. சிந்துபைரவியில் 'பவானி, தயானி' என்கிற பாட்டைப் பாடி, ரேவதிராகத்தில் சாயிபஜன் பாடிக் கச்சேரியை நிறைவுசெய்தனர். இருவரும் இந்த வருடம்தான் +2வை நிறைவு செய்யப் போகிறார்கள்!

பக்கம் வாசித்த திருமதி. சாரதா கிருஷ்ணன் (வயலின் - USC Student), மிருதங்கத்தில் திரு. நவீன் வஸவந்த் ஹல்தியும் மிக அனுசரணையாக வாசித்தார்கள்.

இந்திரா பார்த்தசாரதி,
சான் டியகோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com