அரங்கேற்றம்: அக்ஷய் பிரபாகரன்
செப்டம்ர் 11, 2016 அன்று அக்ஷய் பிரபாகரனின் மிருதங்க அரங்கேற்றம் சான் ஹோஸே, CET அரங்கில் குரு கோபி லக்ஷ்மிநாராயணன் அவர்களின் ஆசியுடன் நடைபெற்றது. அத்தனை பெரிய வித்வான் சிக்கில் குருசரணுக்கு இளம் அக்ஷய் எப்படி ஈடுகொடுக்கப் போகிறார் என்ற பதைபதப்பு என் மனதில் இருந்தது. அக்ஷய் தன்னம்பிக்கை மற்றும் ஆர்வத்துடன் மேடை நுழைந்ததுமே எனக்குத் தெம்பு வந்துவிட்டது.

விறுவிறுப்பான வஸந்தா ராகத்துடன் கச்சேரி தொடங்கி, "சோபில்லு ஸப்தஸ்வர" வரும்போது நான் அரங்கேற்றத்தில் இருக்கிறேன் என்பதை ஏறக்குறைய மறந்தேவிட்டேன். குருசரணின் சவால் பார்வை அவ்வப்போது அக்ஷய்மேல் பாய, கச்சேரி சூடுபிடித்தது.

அஜய் கோபி கஞ்சிராவில் கலக்கினார். அவ்வப்போது நிகழ்ந்த அஜய் அக்ஷய் புன்னகைப் பரிமாற்றம் ரசிக்கும்படியாக இருந்தது. விரிகுடாப்புகழ் ஹெம்மெகே ஶ்ரீவத்ஸனின் உன்னதமான வயலின் இசை அமுதம். குருசரணின் பாடல்களுக்கும், சங்கதிகளுக்கும் அக்ஷயின் மிருதங்க வாசிப்பு ஒத்திசைந்திருந்தது. இனிய நளினகாந்தியில் "மனவியாலகிம்" ஆகட்டும், பாரம்பரிய காம்போஜியில் "ஓ ரங்க சாயி" ஆகட்டும், பக்கவாத்தியம் பாடகரின் மனவோட்டத்துடன் இணைந்து இழைந்தது. தீக்ஷிதரின் அபயாம்பாள் க்ருதியின் ராகபாவத்தை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் அக்ஷய் வாசித்தது பாராட்டத்தக்கது.

அக்ஷயின் தனி ஆவர்த்தனம், குரு கோபி லக்ஷ்மிநாராயணன் கொடுத்த கடும்பயிற்சியையும், வழங்கிய உன்னதமான ஞானத்துக்கும் சான்றாக நின்றது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற டில்லி பி. சுந்தர்ராஜன் அவர்கள் அக்ஷய் மற்றும் இளைய தலை முறையினரைப் பாராட்டிப் பேசினார்.

ஆங்கிலத்தில்: பிரவீணா வரதராஜன்
தமிழில்: மன்னார்குடி பிரபு

© TamilOnline.com