தெரியுமா?: TNF: அசோக்நகர் நூலகம் சீரமைப்பு
சென்ற ஆண்டு டிசம்பரில் சென்னை பெருவெள்ளத்தில் பேரழிவுகண்ட அசோக்நகர் பொதுநூலகம், தமிழ்நாடு அறக்கட்டளை மற்றும் பல அமைப்புகளின் உதவியுடன், சீர்செய்யப்பெற்று இன்றைக்குப் புதுப்பொலிவோடு நிற்கிறது.

நூலகத்தில் இருந்த 155,000 நூல்களில், 11000 நூல்கள் மட்டுமே தேங்கிய நீரிலிருந்து மீட்கப்பட்டன. கன்னிமரா நூலகம், ஈஷா அமைப்புகள் புது நூல்களை வழங்க முன்வந்தன. ஆனால், சேதமடைந்த 38 வருடக் கட்டடத்தையும் புத்தக அலமாரிகளையும் மேசை நாற்காலிகளையும் புதுப்பித்தாலே நூலகத்துக்கு மறுமலர்ச்சி கிடைக்கும் என்கிற நிலை. இதனை TNF துணைத்தலைவர் முனைவர் சோமலெ சோமசுந்தரத்திடம் தெரிவித்தார் நூலகத்துறை இயக்குநர் முனைவர் எஸ். கண்ணப்பன். சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகளை முடிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு, பணி தொடங்கியது. பொறியியல் ஆலோசகர் திரு எஸ்.கருணாகரனின் தலைமையில், பம்பரமாகப் பணிசெய்து முடித்து, ஆகஸ்ட் 20ம் தேதி, TNF தலைவர் சிவசைலம் தலைமையில் அரசுக்கு நூலகத்தை அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது.

இது குறித்து TNF தமிழ்நாடு சேப்டர் அறங்காவலர் திரு. ராஜரெத்தினம், ''இந்தத் திட்டம், 40 லட்சரூபாய் செலவில் முடிந்திருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள ராம்கோ சிமென்ட், ஏஷியன் பெயின்ட் எனப் பல நிறுவனங்கள் பணிக்குத் தேவையான பொருட்களைக் குறைந்த விலையில் வழங்கினர். குழந்தைகளுக்கான பகுதியை ஓவியங்களால் அழகுபடுத்தியவர்கள் 'க்ரியேட்டிவ் கிட்ஸ்' அமைப்பினர். ஊர்கூடித் தேர் இழுத்தாற்போல் நூலகத்தை மீட்டெடுத்திருக்கிறோம்!'' என்கிறார் மகிழ்ச்சியோடு.

17,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்த நூலகத்துக்குத் தினமும் 700க்கு மேற்பட்ட வாசகர்கள் வருகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு: www.TNFUSA.org; மின்னஞ்சல்: tnfusapresident@gmail.com

பிரேமா நாராயணன்

© TamilOnline.com