தம் மக்கள்
(பின்வரும் கட்டுரையில் குறிப்பிடப்படும் தனது மூத்தமகனைக் கட்டுரை ஆசிரியர் செப்டம்பர் மாதத்தில் இழந்துவிட்ட நிலையில் அவரால் மகாபாரதக் கட்டுரையை இந்த இதழில் தொடர இயலவில்லை. ஆயினும் அவர் முன்னர் எழுதியிருந்த இந்தக் கட்டுரை இந்தச் சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமாக இருக்கும் எனக் கருதி வெளியிடுகிறோம் - ஆசிரியர்)

"ஆமா, அது என்னய்யா தம் மக்கள்?" கொஞ்சம் ஆவேசமாகவே கேட்டார் பேச்சாளர். வள்ளுவர் தேவையில்லாத சொற்களைப் போடமாட்டார் என்று முதலில் பேசியவர் பேசிமுடித்திருந்தார். "இல்லை... இல்லவே இல்லை... தேவையில்லாத சொற்களை வேணமட்டும் போட்டிருக்கிறார்" என்று இவர் விளாசிக்கொண்டிருக்கிறார். "குழலினிது யாழினிது என்பர் மழலைச் சொல் கேளாதவர் என்று சொன்னா வெளங்கலியா? போதலியா? 'தம் மக்கள்' ஒண்ணு எதுக்கு ஒட்டுங்கறேன், ஆ? பக்கத்து ஊட்டுக் கொழந்த பேசினா சந்தோசப்பட மாட்டியா? எதிர் ஊட்டுக் கொழந்த பேச்சு வேறமாதிரி தோணுமா? அனாத இல்லத்துல இருக்கற கொழந்தன்னா அந்தப் பேச்சு என்னா 'பீப்பீ' மாதிரி தோணாதா? ஐ... இன்னாய்யா சொல்றாரு இந்தாளு?"

சிரித்துக்கொண்டேன். மேடையும் மைக்கும் இப்போது அவருடையது. நான் கேட்கமட்டும்தான் வந்திருக்கிறேன். அவர் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்ள வேண்டும். 'தம் மக்கள்'தான் அந்தக் குறளிலேயே உயிர்ப்பான சொற்கூட்டு. உணர்வுகளில் தோய்ந்தாலொழிய அதன் பொருள் சிக்கிவிடுமா? மனம்தான் எவ்வளவு நுட்பமானது! மேம்போக்காக மேய்ந்துகொண்டு போவதே தொழிலாகக் கொண்டிருக்கும் மேடைப்பேச்சாளர்கள்! எதையும், எப்படியும் தூக்கியெறிந்து பேசலாம். மேடை போட்டு, மாலை வேறு போட்டாகிவிட்டது. போதாக்குறைக்கு ஒலிபெருக்கி. தன் குரலைத் தானே எட்டுத் திக்கும் எதிரொலிக்கக் கேட்கும் ஆனந்தம்.

அனுபவத்தைப் பற்றியல்லா பேசுகிறார் அந்தக் குறளில்! தான் கலக்காத அனுபவம் ஓர் அனுபவமாகிவிடுமா? எவ்வளவு உயர்வானதானாலும் அல்லது அப்படி இல்லாததானாலும் தான் சம்பந்தப்பட்டது தரும் அனுபவமும், தன்னை நேரடியாகப் பாதிக்காத ஒன்று தரும் அனுபவமும் ஒன்றாகிவிடுமா? தான் வளர்த்த மான் என்ற காரணத்தால்தானே அவ்வளவு பெரிய நாட்டையும், அரச அதிகாரத்தையும் நொடியில் துறந்த ஜடபரதர் உயிர்போகும் தருணத்தில் அந்தக் குட்டியின் நிலையைப் பற்றியே எண்ணியவாறு உயிர்விட்டார்? அதனால்தானே இன்னும் இரண்டு பிறவிகள் அவர் எடுக்க நேரிட்டது? அவரை விட்டுவிடலாம். நம்மைப் பார்ப்போம். தெருவில் திரியும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும், தான் வளர்க்கும் குட்டியாகிவிடுமா?

அட இருக்கட்டும். அங்கேயாவது தெருநாய், சாதிநாய் என்று பாகுபாடு இருக்கிறது. அனாதைக் குழந்தையே ஆனாலும், அதே குழந்தை தன்னுடைய வளர்ப்புப் பிள்ளையாக மாறும்போது நேற்றைக்குக் கேட்ட மழலை இன்றைக்கு வேறு மாதிரியாகத்தான் தோன்றுமில்லையா? இல்லை, தோன்றாதா? எனில், தான் பெற்றது என்றால்? மனம் தன்னிச்சையாகப் பின்னோக்கிப் பயணப்பட்டது.

*****


வீடு வாங்கவேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்த நேரம் அது. தாம்பரத்திலிருந்து போரூர் போகும் வழியில் மெயின்ரோடுக்குப் பக்கத்திலேயே அருமையான வீடு இருக்கிறது என்று தெரிந்தவர் ஒருவர் சொல்லியிருந்தார். அந்த வீட்டருகில்தான் அவரும் குடியிருக்கிறார். ஸ்கூட்டரில் நானும், மனைவியும், என் பெரிய பிள்ளையும் அந்த வீட்டைப் பார்க்கப் போய்க்கொண்டிருக்கிறோம். அவனுக்கு அப்போது ஒரு ஆறு வயதிருந்திருக்குமோ? இருக்கலாம். இப்போது வளர்ந்துவிட்டான். வேலைக்கும் போயாகிவிட்டது.

சென்னைக்கு மிக வெளியே பரபரப்பான, ஆனால் குறுகிய சாலை. மெயின்ரோடு என்ற சொல் அதற்கு உயர்வு நவிற்சியா, இடக்கரடக்கலா, யூஃபமிசம் என்பார்களே அதுவா என்று கூட்டம் கூட்டி விவாதிக்கலாம். ப்ளூமெட்டல் எனப் பெயரெழுதிய, குட்டியான, பேய்வேகத்தில் செல்லும் கருங்கல் ஜல்லி லாரிகள் ஒவ்வொரு நிமிடமும் என் ஓட்டுந்திறனைப் பரிசோதித்துக்கொண்டிருந்தன. ஒரு லாரி வந்தால், தெருவில் முக்காலுக்குமேல் அடைத்துக்கொள்ளும். 'பத்திரம், பத்திரம்' என்று ஒவ்வொரு வினாடியும் உள்ளம் எச்சரிக்கிறது. முன்னால் பிள்ளை. பின்னால் மனைவி. பல்லைக் கடித்துக்கொண்டு வண்டியைச் செலுத்திக்கொண்டிருக்கிறேன். திடுமென்று வளைத்துத் திருப்பி முன்னால் இருந்த காரை முந்தி, எனக்கு எதிரில் ஒரு கருங்கல் லாரி சடக்கென்று முளைத்தது. சாலைத் திருப்பம் வேறு. அதிர்ந்துபோய் சாலையின் பக்கச்சரிவில் இறக்கிவிட்டேன். வண்டி உருண்டது. முன்னால், என் கைக்கிடுக்கில் நின்றுகொண்டிருந்த பிள்ளை உருண்டான். வண்டியை அப்படியே போட்டுவிட்டு அவனைப் பற்றினேன். பதற்றம் வினாடிக்கு வினாடி ஏறியது. "அடிகிடி பட்டிருக்கா?" எனக்குக் குரல் நடுங்கியது. மனைவி அழவே ஆரம்பித்துவிட்டாள். பிள்ளை தைரியமாகத்தான் இருந்தான். "ஒண்ணுல்ல. சும்மாரு" என்று அவன் கூச்சம் பிடுங்கச் சொன்னாலும், திருப்பித் திருப்பிப் பார்த்து, கை, கால், உடல் என்று நன்றாகப் பரிசோதித்த பிறகல்லவா நாங்கள் அன்று தொடர்ந்தோம்.

நண்பர் வீட்டுக்குப் போனால், நாங்கள் பார்க்கப்போயிருந்த வீட்டின் சொந்தக்காரர் ஒருமணி நேரத்துக்கு முன்னால்தான் போயிருந்தார். அந்தக் குடும்பம் இந்த வீட்டில் இல்லையாம். ஒரு மாதத்துக்கு முன்னால் காலி பண்ணிக்கொண்டு நகரத்தைப் பார்க்கப் போய்விட்டார்களாம். நாங்கள் வரப்போகிறோம் என்று கேள்விப்பட்ட வீட்டுக்காரர் வந்திருந்திருக்கிறார். நேரமாகிவிட்டது. போய்விட்டார். நல்லவேளை. சாவி நண்பரிடமிருந்தது. "நீங்க போய் தெறந்து பாருங்க. இங்கதான் தாம்பரத்துக்கிட்ட போயிருக்கார். ஃபோன் நம்பர் கொடுத்திருக்கார். நான் போய் அவரை வரச்சொல்றேன்" என்று சாவியைக் கொடுத்துவிட்டு நண்பர் ஃபோன் தேடிப் போய்விட்டார். செல்லாவது, கொல்லாவது! அந்த நாளில் தொலைபேசிக்கே அரை கிலோமீட்டராவது நடக்கவேண்டும். 'சூடான பொட்டக்காடு ஜோராகக் கத்திப் பாடு' என்று நிலைமை புரியாமல் என்னுடைய வாண்டு கத்தியபடி காற்றைப் பிளந்துகொண்டு இஷ்டத்துக்குத் திறந்த வெளிகளில் ஓடுகிறான்.

வீட்டைப் பார்த்தோம். சின்னதுதான். எங்களுக்குப் போதாது என்று தோன்றியது. அங்கங்கே பாதிப்பாதி கட்டி நிறுத்தியிருந்தது. மாடியில் அறைமாதிரி ஒன்று முளைத்து, கூரையில்லாக் குட்டிச்சுவராய் நின்றிருந்தது. வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை.... வரவேற்பறைக்கும் படுக்கையறைக்கும் நடுவில் திடுமென ஒரு புதிய அறைக்கான ஒற்றைக்கல் தடுப்பு. அப்படியே பாதியில் நிற்கிறது. பின்பக்கம் போனால், அங்கே சின்னத்தோட்டம். அங்கேயும் ஒரு அறை. மூன்று பக்கம் கட்டி முடித்து, கூரையும் முடிந்து ஒற்றை மின்வடம் வீட்டுக்குள்ளிருந்து கிளம்பி உச்சியில் விளக்கு நுனியோடு தொங்கிக்கொண்டிருந்தது. வாசல் பக்கம் முடிந்தபாடில்லை.

'இந்த பொட்டைக் காட்டில் குடியிருக்க முடியாமல்தான் அவர்கள் நகரத்தை நோக்கிப் போய்விட்டார்கள் போலிருக்கிறது.' 'குடியிருக்கப் போறதில்லன்னா பின்ன எதுக்கு அங்கங்க மொட்ட மொட்டச் செவுரா கட்டிப் போட்டிருக்காங்க?' 'வாங்கி ரீ மாடல் பண்ணிக்கலாம்...' 'வெலயக் கொஞ்சம் இழுத்துப் பிடிக்கணும்...' 'பீரோவயும் கட்டிலயும் போட்டா இது ரொம்பிடும். அப்புறம் எங்க நடக்கறது?' சம்பந்தமில்லாத துணுக்குகளாய்ப் பேசிக்கொண்டிருந்தபோது வாசலில் மோட்டார்சைக்கிள் சத்தம். வீட்டுக்காரர் வந்துவிட்டார்.

கருப்பாய், உயரமாய் இருந்தார். தலை கலைந்திருந்தது. கண் சிவந்திருந்தது. "சார் கம்சீல்டாஸ் ஆப்பீஸ்லதான் இருக்கார். ஆப்பீசர்." அறிமுகம். வணிகவரி அலுவலக உத்தியோகம். கண் ஏன் சிவந்திருக்கிறது? அருகில் வந்ததும் காரணம் புரிந்தது. குடித்திருக்கிறார். "ரொம்ப சாரி சார்" கை நீட்டினார். சம்பிரதாயத்துக்கு ஒருமுறை தொட்டு எடுத்தேன். 'என்னடா இவன் குடிச்சிட்டு வந்து நிக்கறான்' என்று கொஞ்சம் கோபமும் வந்தது. "இப்பத்தான் ஃப்ரெண்டோட ஓட்டலுக்குப் போனோம். நீங்க வர்ல போலன்ட்டு நென்ஷ்டேன்," நா குழறியது. "அப்பால இவுரு ஃபோன் பண்ணாறா, பாதில அப்டியே போட்டுட்டு வன்ட்டோம்." ஓஹோ, பாதி குடியில் இருந்திருக்கிறார். கம்சீல்டாஸ் ஆப்பீசர். அங்கே கடையில் எல்லாத்தையும் தனியாக எடுத்து வைத்திருப்பான். இங்கே முடித்தபிறகு அங்கே போய் 'தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே பார்த்திருந்தால் வருவேன்' என்று பாங்கனோடு போய்விடலாம். விட்ட இடத்திலிருந்து தொடர. நண்பர் அந்த ஓட்டலை(!)த்தான் தொலைபேசியில் கூப்பிட்டிருக்கிறார் தொலைபேசி எண் கொடுத்து, அழைக்கச்சொல்லும் அளவுக்கு உரிமையாளர் தெரிந்தவராய் இருக்கவேண்டும். பழக்கமான இடமாயிருக்கும். தினந்தோறும் மூழ்கித்தான் எழுவார் போலிருக்கிறது.

"வூட்டப் பாத்தீங்களா... பாருங்க பாருங்க..." நடந்தார். தொடர்ந்தோம். "இங்க ஒரு ரூம் போடறதா இருந்துது. பய்யன் பத்தாவது வந்ததும் கட்ட ஆரம்பிச்சோம்." வரவேற்பறைக் குட்டிச்சுவருக்கு விளக்கம். "இங்க குந்திக்கினு படிக்கட்டும்னுதான் இத்தக் கட்னது" மாடியில் நிற்கும் குட்டிச்சுவர்களுக்கு விளக்கம். "பத்தாவது வண்ட்டானே... ஹால்கிட்ட ரூம் போட்டா டிவி பாக்க வந்துருவான். டிவி பாத்துக்கினே இர்ந்தா எப்புடின்னுட்டுதான் பின்பக்கம் கட்னோம். அல்லாம் கிட்டத்தட்ட முடிஞ்ச கணுக்குலதான்" பேசிக்கொண்டே போனார். வீட்டை ஒரு சுற்று சுற்றிவிட்டு, வரவேற்பறைக்குத் திரும்பினோம்.

"இந்த வீடு விக்கணோம்னே இல்லீங்க. நாங்க நல்லாத்தான் இருக்கோம். அவுசரமே இல்லீங்க." பேசிக்கொண்டே போனவரின் கண்கள் வரவேற்பறையின் வாசலுக்கு அருகில் அடிக்கடி பார்ப்பதாகத் தோன்றியது. அந்தப் பக்கச் சுவரில் அவர் கண்கள் நிலைகுத்தி நிற்கும். பேச்சு தடைப்படும். மறுபடியும் செருமிக்கொண்டு தொடர்வார். பேச்செல்லாம் பய்யன்... பய்யன்... பய்யன்... 'யோவ் அறுக்காதயா... சீக்கிரமா விட்டுத்தொலை. நீ பேசற நிலைல இல்ல. நாங்க போய் அப்புறம் சொல்லி அனுப்பறோம்' சொற்கள் நாக்கு நுனிவரை வந்து, வந்து நின்றன. சொல்ல முடியவில்லை. அவர் குரலில் ஒரு தழுதழுப்பு இருந்தது. அதுவும் காரணமாக இருக்கலாம். குடித்த நாவு தடுமாறுகிறது என்று தோன்றியது. இல்லை இது வேறு என்னவோ ஒன்று என்றும் தோன்றியது. வீடு விற்கவேண்டுமென்று சொல்லி, வாங்க ஆள்வந்து நிற்கும் வேளையிலா குடித்துவிட்டு வருவது?

'களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று' என்று ஒரு பக்கம் உள்ளே ஓடுகிறது. இன்னொரு பக்கம், கார்காலம் முடிந்தும் சீதையைத் தேட இன்னும் ஏன் ஏற்பாடு பண்ணவில்லை என்று கோபமாக வந்து நிற்கும் இலக்குவனோடு பேச இயலாத நிலையில், கள் மயக்கத்தில் கிடக்கும் சுக்ரீவன் வந்து போகிறான். 'ஆ அடக்குடா... நீ ரொம்ப ஒழுங்கு' என்று இன்னொரு பக்கம் இடக்குப் பண்ணுகிறது.

"இங்கதான் சோபா போட்ருந்தோம்," அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்த அந்தச் சுவரைத் தொட்டுக் காட்டுகிறார். "அதோ அங்க டிவி இருக்கும்." எதிர்ப்பக்கம். "பய்யன் இங்கதான் குந்திக்கினு, இதோ இப்புடி (தலையைப் பின்பக்கம் தொங்கவிட்டுக் காட்டுகிறார்) செவுத்துல சாஞ்சிக்கினு டிவி பாப்பான்." தடுமாற்றம் அதிகரிக்கிறது. இந்த நிலையில் இருக்கும்போது தலையை வேறு பின்பக்கம் சாய்த்தால் கிர்ர் அதிகமாகாமல் என்ன ஆகும்?

"இதோல்ல... எண்ணக் கற... அவன் தலை எண்ணக் கறதான்" அந்த இடத்தை வாஞ்சையாகத் தடவுகிறார். "செவுத்துல சாஞ்சி சாஞ்சி இந்த எடம் கறயாயிடுச்சி." கண்ணில் நீர் வழிகிறது. என்ன ஆயிற்று இந்த ஆளுக்கு? நான் சற்றே கூர்மையாகப் பார்க்கத் தொடங்கினேன். குடிகாரன் பேச்சாக இல்லை இது. அப்போதுதான் என் கண்ணுக்கு அந்த எண்ணெய்க்கறை பட்டது.

"ஏன், என்ன ஆச்சு? ஏன் அழறீங்க," என்ன பேசுவது என்று தெரியாமல் தயங்கித் தயங்கிச் சொற்களை அடுக்கினேன். விம்மினார். உடைந்தார். வெடித்து அழுதார். "சார் சொல்லலீங்களா? ரெண்டு மாசம் மின்னாடி ரோட்ட க்ராஸ் பண்ணச்சொல்லோ கர்ங்கல் லாரிக்காரன் அஷ்ட்டான் சார்..." அழுகை வெடிக்கும். அடக்கப் பெரும்யத்தனம் நடக்கும். நா குழறும். சொல் தடுமாறும். துண்டு துண்டாய் உடைந்து விழும். ஐயோ! இதுவா! இதுவா காரணம்! சட்டென்று எல்லாம் அதனதன் இடத்தில் விழுந்தன. அதுதான் இங்கேயே அடிக்கடி பார்த்தாரா? எனக்கு அந்தக் கறை இதுவரை கண்ணிலேயே படவில்லையே! பையன் விபத்தில் இறந்துவிட்டான். அவன் விட்டுச் சென்றிருக்கும் தடம் இது. அவருக்கு இது அவருடைய பய்யன். 'செத்துட்டான்,' 'விபத்து' 'விபத்தில் போயிட்டான்' போன்ற சொற்களை அவர் முயற்சி பண்ணித் தவிர்க்கிறார் என்பது புரிந்தது. அவன் அங்கேதான் இருக்கிறான். எண்ணெய்க் கறையாக.

"ரெண் நாள் தெருவுல ரத்தமா இருந்தது. மண்ணப் போட்டு மூடினாங்க. ஆனாக்கூட என் கண்ணு அந்த மண்ணுல சேப்பு தெரீதான்னே பாக்கும்..." நிலமே அம்மியாக, தலையற்ற உடலே குழவியாக அக்ககுமாரனைத் தரையோடு தரையாக அனுமன் அரைத்த இடத்தில் குருதி தேங்கி நின்றதாம். ராவணன் அதைப் பார்க்கவொண்ணாது கதறினானாம். எந்த அப்பனானால் என்ன? பிள்ளைப்பாசம் அவ்வளவு எளிதில் விடுமா?

"இங்கியே இர்ந்தாக்க ஒரே னாபகமா வர்து சார்... அதான் காலி பண்ணிட்டு போய்ட்டோம். இத்தப் பாக்கச் சொல்லோல்லாம் ஒரே அழயா வருது" எண்ணெய்க்கறையைத் தடவுகிறார். அவருக்கு அது பிள்ளை. "இதுமேல சுண்ணாம்பு அட்சிடலாம் பாத்தா மன்சு வர்ல சார்... அப்புடியே உட்டாலும் பேஜாராவுது. அத்தான், வூட்ட வாங்கறவங்க இன்னாவே பண்ணிக்கட்டும்னு அப்புடிய உட்டுட்டோம்..."

ர்ர்ர்ர்ர்ர்ர் என்று காற்றில் லாரி ஓட்டிக்கொண்டு, வெளியில் விளையாடிக்கொண்டிருந்த என் பிள்ளை உள்ளே ஓடிவந்தான். என்னுள் இருக்கும் அப்பன் எதிரில் இருக்கும் அப்பனை உணர்ந்தான். அதுவரை என்னை அரித்துக்கொண்டிருந்த குடிகாரன் போன திசை தெரியவில்லை. அன்னியம் உடைந்தது. தன்னையறியாமல் அவரை அணைத்துக்கொண்டேன். தோளில் தட்டி, முதுகில் தடவி, மெளனமாக அவரை அமைதிப்படுத்த முனைந்தேன். இப்போதுதான் என் பிள்ளை ஒரு விபத்தின் பிடியிலிருந்து தப்பியிருக்கிறான். எனக்குத் தெரியும் இதன் பரிமாணம். எனக்குப் புரியும் இந்த நிலை. அங்கே இருப்பது செங்கல்லும், சிமிட்டியும், வர்ணப் பூச்சும், கொஞ்சம் எண்ணெய்த் தடமுமா?

அது மற்றவர்களுக்கு. சில வினாடிகளுக்கு முன்வரை எனக்கும்.

*****


மனைவியைக் கவிதையாகப் பார்த்தான் பாரதி. கவிதையை மனைவியாகப் பார்த்தான் என்றாலும் பொருந்தும்.

... ... ... ... சக்தி நிலையமே, நன்மனைத்
தலைவீ, ஆங்குஅத் தனிப் பதர்ச் செய்திகள்
அனைத்தையும் பயன் நிறை அனுபவம் ஆக்கி
உயிரிலாச் செய்திகட்கு உயிர் மிகக் கொடுத்து
ஒளியிலாச் செய்திகட்கு ஒளி அருள் புரிந்து......

(வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி..)

என்று சொல்லிக்கொண்டே போவான். மிகச் சாதாரணமான செய்திகளும் கவிதைக்குள் பயன் நிறை அனுபவமாகின்றன. அனுபவம் என்பது எப்போது பூரணம் ஆகிறது என்றால், அங்கே 'தான்' உணரப்படும்போது. இன்னொரு முறை. உணரப்படும்போது. அகம்பாவத்தில் எழும் தான் இல்லை இது. இது வேறு. மக்கள் அனுபவத்தை விளைவித்தால் அதைப் பரிபூரணமாக்குவது 'தம்'. அது எண்ணெய்க் கறையானாலும் சரி; மழலைச் சொல்லானாலும் சரி. 'தம் மக்கள்' என்ற சொற்களை எடுத்துவிட்டால் மிஞ்சுவது வெறும் சொற்கூட்டம். அடுக்கிவைத்த செங்கல். உணர்ச்சியற்ற ஒலியன்.

நான் என் உலகிலிருந்து மீளும்போது கூட்டம் முடிந்து நன்றியுரை நடந்துகொண்டிருந்தது.

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com