அரங்கேற்றம்: ஈஷா மைசூர்யா
ஜூன் 25, 2016 அன்று தென்கரோலினாவின் தலைநகர் கொலம்பியாவில் லெக்ஸிங்டன் நடுநிலைப்பள்ளி கலையரங்கில் செல்வி. ஈஷா மைசூர்யாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இவரது குரு திருமதி. உமா கிருஷ்ணமூர்த்தி. ஈஷாவின் பெற்றோர் முகேஷ் - ஹிமாக்‌ஷி மற்றும் சகோதரன் துருவ் வந்தோரை வரவேற்றனர்.

புஷ்பாஞ்சலியைத் தொடர்ந்து, திஸ்ர நடையில் அலாரிப்பும், பின்னர் கல்யாணியில் ஜதிஸ்வரமும் ஆடினார் ஈஷா. அடுத்ததாக "ஆனந்த நர்த்தன கணபதிம்" நாட்டை ராகப் பாடல் மேடையில் வினாயகரே ஆடவந்ததுபோல இருந்தது. அடுத்து ஷண்முகப்ரியா பதவர்ணத்தில், பாற்கடல் கடைந்து அமுதம்பெற்ற கதை, மூவடி மண் அளந்த கதை இவற்றுக்கான பாதவேலைகள், முகபாவங்கள் நேர்த்தியாக இருந்தன

"போ சம்போ" இல்லாமல் அரங்கேற்றமா! தொடர்ந்தது அற்புதமான தேவி ஸ்துதி. கதனகுதூகலத்தில் அமைந்த தில்லானா ஸ்ரீகிருஷ்ணன் பேரில்; ஜகஜகவென ஜதிக் கோர்வைகள், தாளக்கட்டுகளுடன் தில்லானா முடிந்ததும் கரவொலி அடங்கச் சிறிது நேரமாயிற்று. மங்களம் ஆடி, ஆடலரசனுக்கும், குருவுக்கும், அவையினருக்கும் நன்றி கூறினார் ஈஷா.

ஈஷா 10வது முடித்துவிட்டு, அடுத்து Governor's School for Science and Mathematics பள்ளியில் சேரவிருக்கிறார். தாயைப்போல தானும் இதயநிபுணராக விரும்புகிறார். பரதநாட்டியத்துடன் வயலின் இசையும் கற்று, பிராந்திய மட்டத்தில் தேர்வு பெற்றுள்ளார்.

சுப்பலக்ஷ்மி ராமமூர்த்தி,
அட்லாண்டா

© TamilOnline.com