தென்விரிகுடா தமிழ் கல்வி பள்ளி: ஆண்டு விழா
ஜூன் 4, 2016 அன்று தென்விரிகுடா தமிழ் கல்வி பள்ளியின் ஆண்டுவிழாவும் குழந்தைகளுக்குப் பட்டமளிப்பு விழாவும், ஹார்பர் சிட்டியில் அமைந்துள்ள நார்போர்ன் உயர்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது.

குழந்தைகள் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழ் பட்டிமன்றப் பிதாமகர், மூத்த தமிழறிஞர் திரு. சாலமன் பாப்பையா அவர்கள் விழாவுக்குத் தலைமை ஏற்றார்கள். தென்விரிகுடா தமிழ் கல்வி மற்றும் தென்கலிஃபோர்னியா மாகாணத்தின் பிற தமிழ்க்கல்வி மாணவ மாணவியரும் கலைநிகழ்ச்சிகளை வழங்கினர். குறிப்பாக "தமிழா! தமிழா!", "அச்சம் அச்சம் இல்லை", மற்றும் "சங்கே முழங்கு" ஆகிய பாடல்களைக் குழந்தைகள் பாடி ஆடியபோது, அரங்கம் உணர்ச்சிப் பெருக்கில் மூழ்கியது.

மாலை நடக்கவிருக்கும் பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு முன்னோடியாக லாஸ் ஏஞ்சலஸ் தமிழ்ப்பள்ளி குழந்தைகள் "தமிழ் படிப்பது சுகமா? சுமையா?" எனச் சுவைபட வாதாடி உள்ளங்களைக் கொள்ளைகொண்டனர். ஈஸ்ட்வேல் தென்கலிஃபோர்னியா தமிழ்க்கல்வி பள்ளியினர் "செம்மொழியான தமிழ் மொழியாம்" பாடலுக்கு ஆடிய நடனம் நேர்த்தியாக இருந்தது. பேசடினா அறநெறிப் பாடசாலை குழந்தைகள் இசையமைத்துப் பாடிய பாடலும், சான்ட கிளாரிடா தமிழ் அகாடமி குழந்தைகள் நடத்திய நாடகமும் அருமை.

தென்விரிகுடாக் குழந்தைகள் கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் என ஆடிப் பரவசப் படுத்திவிட்டார்கள். அவர்கள் நடத்திய திருவிளையாடல் நாடகம் அரங்கத்திலிருந்தோரைக் கயிலாயத்திற்கே அழைத்துச் சென்றது. பரதநாட்டியமும், அன்னையர் நால்வர் ஆடிய கரகாட்டமும், பெற்றோர்கள் ஆடிய குழு நடனமும் கைதட்டலைப்பெற்றன.

தென்விரிகுடாப் பள்ளியின் அனைத்துக் குழந்தைகளுக்கும் அய்யா அவர்கள் கேடயம் வழங்கினார். பள்ளி முதல்வர்கள் திருமதி. கவிதா மற்றும் திரு. வெங்கட் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவிக்க, அய்யா அவர்கள் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்தினார்.

நிகழ்ச்சியின்போது, கர்நாடக சங்கீதத்தில் சாதனை புரிந்துவரும் ஸ்பிரிங் நெக்டார் அகாடமி நிறுவனர்களான திருமதி. ரோஸ் முரளிகிருஷ்ணன், திரு. முரளிகிருஷ்ணன் தம்பதியர், சாலமன் பாப்பையா அவர்களால் கௌரவிக்கப்பட்டார்கள். காங்கிரஸ்மேன் திரு. டெட் லியூவின் சார்பில் திரு வெஸ் ஹேஸ் பங்கேற்றுத் தென்விரிகுடா தமிழ் கல்வி பள்ளிக்கு, அமெரிக்காவில் தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் வளர்த்துவரும் அமைப்பு எனச் சான்றிதழ் வழங்கினார்.

விழாவையொட்டிக் குழந்தைகளுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டியும், ஓவியப் போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் போட்டி ஆகியவை நடைபெற்றன. பெரியோர்க்கான பிரிவில் கைப்பந்து, டென்னிஸ், கிரிக்கெட், டேபிள் டென்னிஸ் போட்டிகள் இருபாலருக்கும் நடத்தப்பட்டன. முதல் இரு இடங்கள் பெற்றவர்கள் விழாமேடையில் கௌரவிக்கப்பட்டார்கள்.

மாலை நிகழ்ச்சிளின் தொடக்கமாக, முதல்வர்கள் கவிதா, வெங்கட் தலைமையில் பறை ஆட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் உச்சமாக, திரு. சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில், "அயல்நாட்டில் நாம் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. எட்டு பேச்சாளர்களும், நடுவரும் தமது நையாண்டியான, பொருள்பொதிந்த கருத்துக்களை முன்வைத்து இரண்டு மணி நேரத்திற்குக் கட்டிப்போட்டனர். இறுதி நிகழ்ச்சியாக பள்ளியின் ஆண்டு மலரை சாலமன் பாப்பையா வெளியிட்டார். முதல்வர்கள் வழங்கிய நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com