மனதுக்கொரு ரிமோட் கண்ட்ரோல்
டி.வி.யின் ரிமோட் கண்ட்ரோல் கையில் இருந்தால் விரும்பும் எந்த நிகழ்ச்சிக்கும் நாம் செல்லலாம். விரும்பும்போது வைக்கலாம். வேண்டாம் என்றால் அதை நிறுத்திவிடலாம். இதுபோல் மனம் நமது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். அதை அடைவதற்குரிய வழி தியானம். கர்மத்தையும் மனதின் சலனமற்ற நிலையையும் சமமாகக் கொண்டுசெல்லும் பாதையாகும் தியானம்.

- மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி

கடலில் ஒரு கிளி
ஆழ்கடலில் சஞ்சரிக்கும் ஒரு கப்பலில் ஒரு கிளி அமர்ந்திருந்தது. சில தினங்கள் கடலில் சென்றபிறகு, அக்கிளிக்குக் கரைக்குச் செல்லவேண்டும் என்ற ஆசை தோன்றியது. அது கப்பலின் பாய்மரத்தில் அமர்ந்து, நாற்புறமும் பார்த்தது. கண்காணும் தூரம்வரை எங்கும் கடல் பரந்துவிரிந்து இருந்தது. கரையை அடையும் ஆசையுடன் அது கிழக்கு நோக்கிப் பறந்தது. எவ்வளவு தூரம் பறந்தாலும் கரையைக் காணவில்லை. தொடர்ந்து அத்திசையில் பறப்பதால் எந்தவிதப் பயனுமில்லை என்று புரிந்துகொண்ட கிளி, பின்னர் வெகுநேரம் தெற்குத் திசையை நோக்கிப் பறந்தது. பின்னர், மேற்கு நோக்கிப் பறந்தது. இவ்விதமாக நான்கு திசைகளை நோக்கியும் பறந்து சோர்வடைந்த கிளி, கடைசியில் அந்தக் கப்பலுக்கே திரும்பி வந்தது. அங்கே பாய்மரத்தின்மேல் அமர்ந்து ஓய்வெடுத்தது. பொறுமையுடன் கப்பலிலேயே காத்திருந்தபோது, கடைசியில் கப்பல் ஒருநாள் கரையை அடைந்தது. இப்படியாக, கிளியும் கரையை அடைந்தது. இக்கதையில் வரும் கிளியைப் போன்றது மனம். அது எப்போதும் ஒவ்வொரு ஆசை, நிறைவேறாத கனவுகளின் பின்னால் அலைகிறது. ஆசை பேராசையாக மாறியதும் மனதில் எல்லாக் கட்டுப்பாடுகளும் நசித்துவிடுகின்றன. இவ்வாறு சந்தோஷமும் சமாதானமும் அடியோடு நசிக்கின்றன.

- மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி

சினம் தவிர்
ஒரு வருடத்துக்கு முன்பு கேட்ட நல்ல ஆன்மிக உரை இன்று நமக்கு நினைவுக்கு வராது. ஆனால் 25 வருடங்களுக்கு முன்பு ஒருவர் நம்மை அவமதித்ததையும், கீழான வார்த்தைகளால் திட்டியதையும் நாம் அப்படியே மனதில் வைத்திருப்போம்.

ஒருவர் நம்மைக் குறைகூறவோ, விமரிசிக்கவோ செய்யும்போது, சட்டென்று கோபப்பட்டுப் பேசிவிடாமல் இருக்க முயலவேண்டும். சிறிதுநேரம் மௌனமாக இருக்கவேண்டும். பேசக்கூடாத வார்த்தைகளைப் பேசாமல் இருக்க இது உதவும். கோபம் வந்தால் சிறிதுநேரம் ஜபிக்கவோ, தியானிக்கவோ வேண்டும்.

- மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி

வார்த்தைகளின் சக்தி
நன்மையை நோக்கியும் தீமையை நோக்கியும் நம்மைச் செலுத்தும் சக்தி வார்த்தைகளுக்கு உண்டு. செய்வதறியாது பரிதவித்து நின்ற வேளையில் அர்ஜுனனுக்கு அறிவையும், ஆற்றலையும் அளித்தவை ஸ்ரீகிருஷ்ணரின் வார்த்தைகளே ஆகும். மாறாக, கூனியின் வார்த்தைகள் கைகேயியை அறியாமை இருளில் தள்ளியது.

- மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி

© TamilOnline.com