இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தர்
பிரபல திரைப்பட இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தர் (85) சென்னையில் காலமானார். வேலூர் ஆற்காட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், 'வீரத்திருமகன்' திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுள் இயக்குநராகக் கால்பதித்தார். 'நானும் ஒரு பெண்', 'காக்கும் கரங்கள்', 'தெய்வமகன்', 'ராமு', 'அதேகண்கள்', 'அன்பே வா', 'பாரத விலாஸ்', 'டாக்டர் சிவா' போன்ற இவரது படங்கள் வசூலில் சாதனை படைத்தன. தொடர்ந்து சிவாஜிகணேசன் படங்கள் பலவற்றை இயக்கி வெற்றிப்பட இயக்குநராக வலம்வந்தார். 'இரு மலர்கள்', 'தெய்வமகன்', 'எங்க மாமா', 'டாக்டர் சிவா', 'அவன்தான் மனிதன்', 'பைலட் பிரேம்நாத்' போன்ற படங்கள் இவரது இயக்கத்தில், சிவாஜியின் நடிப்பில் வெளிவந்து முத்திரை பதித்தன. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் இவர், பல திரைப்படங்களின் கதாசிரியராகவும் பணி புரிந்திருக்கிறார். தமிழக அரசின் கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியின் தலைவராகப் பணிபுரிந்திருக்கிறார். தமிழில் சிறந்த படங்களுக்கான தேர்வுக்குழுத் தலைவராகவும் இருந்துள்ளார்.



© TamilOnline.com