அரங்கேற்றம்: சாய் ராஜேஷ்
மே 22, 2016 அன்று, சான்ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியில் திரு. ஹரி தேவ்நாத், திரு. விவேக் சுந்தரராமன் நடத்திவரும் ஸ்ரீ பாதுகா அகாடெமியில் பயிலும் சாய் ராஜேஷின் அரங்கேற்றம், CET அரங்கில்

நடந்தேறியது. திரு. நெய்வேலி சந்தானகோபாலன் வழிகாட்டுதலில் அகாடெமி சிறப்பாக 14 வருடங்களாக இயங்கிவருகிறது.

சுபா ராஜேஷ் மற்றும் ராஜேஷ் ஆகியோரின் புதல்வனான சாய் ராஜேஷ், 13 வருடங்களாகக் கர்நாடக சங்கீதம் பயின்று வருகிறார். சிறுவயதுமுதலே லலிதகான வித்யாலயாவின் திருமதி. லதா ஸ்ரீராமிடம்

பயின்றார். பின்னர் ஸ்ரீபாதுகாவில் பயிற்சியைத் தொடர்ந்தார். பிரபல சாக்ஸபோன் வித்வான் கதிரி கோபால்நாத் அவர்களின் தலைமையில் அரங்கேற்றம் இனிதே நடந்தது.

பக்கபலமாய் திரு. அரவிந்த் லக்ஷ்மிகாந்தன் வயலின் வாசிக்க, திரு நடராஜன் ஸ்ரீனிவாசன் மிருதங்கத்தில் ஜமாய்க்க அரங்கேற்றம் அமர்க்களமாக நடந்தது.

தோடி வர்ணத்தில் தொடங்கி நாட்டையில் சரசிருகசனப்ரியே, கௌளையில் ஸ்ரீ மகாகணபதிம் நேர்த்தியாகப் பாடி ஆஹா வாங்கினார். பந்துவாரளியில் நின்னே நெரநம்மியில் நிரவல் மற்றும் ஸ்வரம் கனகச்சிதமாகப்

பாடினார். நளினகாந்தியில் மனவ்யாலகின்சரா, தர்பாரில் யோசனா கமல லோசனா என்று பிரபல தியாகராஜ கிருதிகளைப் பாடியது நல்ல உத்தி . கீரவாணியில் அம்பவாணி, மோகனத்தில் நன்னு பாலிம்பா என்று

பாடல்தேர்வு நன்றாகவே இருந்தது. சாமாவில் வருவாரோ வரம் தருவாரோ என்ற கோபாலகிருஷ்ண பாரதியாரின் தமிழ்ப் பாடலைத்தொடர்ந்து ரேவதியில் மகாதேவா சிவசம்போ, சுருட்டியில் ஸ்ரீ வெங்கடேச கிரீஷம்,

பூர்விகல்யாணியில் விறுவிறு தில்லானா எல்லாம் கைதட்டலை அள்ளின. திருப்புகழோடு கச்சேரி நிறைவடைந்தது.

சாய் ராஜேஷை வாழ்த்திப் பேசிய கதிரி கோபால்நாத், இசையார்வத்தை விட்டுவிடாமல் மெருகேற்றும்படி வலியுறுத்தினார். குருவிடம் தான் இன்னும் கற்றுக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டியதும் அவையே வியந்தது.

அருணா ஸ்ரீனிவாசன்,
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com