சாத்தூர் ஏ.ஜி. சுப்ரமணியம் நூற்றாண்டு விழா
ஜூன் 25, 2016 அன்று விரிகுடாப்பகுதி சன்னிவேலில் உள்ள நாதலயா இசைப்பள்ளி, புகழ்பெற்ற இசைமேதை சாத்துர் திரு. ஏ.ஜி. சுப்ரமணியம் அவர்கள் பிறந்த நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் ஓர் இசைநிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இது மில்பிடாஸில் உள்ள ஷீரடிசாய் பரிவாரில் மதியம் 3 மணிமுதல் 6 மணிவரை நடைபெற உள்ளது. 'ஸ்ரீ சுப்ரமணியாய நமஸ்தே' என்ற பொருத்தமான பெயர்கொண்ட இந்த நிகழ்ச்சியை நாதலயா பள்ளி ஆசிரியர்களான திருமதி. சாந்தி ஸ்ரீராம் (சாத்தூராரின் பேத்தி), திரு. ஸ்ரீராம் பிரும்மானந்தம் மற்றும் அவர்களது மாணவர்கள் சேர்ந்து திரு. சாத்தூர் அவர்களுக்கு ஒரு இசையஞ்சலியாகச் சமர்ப்பிக்க உள்ளனர். மேலும் சிறப்பு விருந்தினராக சாத்தூராரின் மகள் விதூஷி திருமதி. லக்ஷ்மி சுந்தரம் அவர்கள் பங்கேற்பார். திருமதி திவ்யா ராமச்சந்திரன் (வயலின்), திரு. கணேஷ் ராமநாராயணன் (கஞ்சிரா), அருண் ஸ்ரீராம் (மிருதங்கம்) ஆகியோர் பக்கம் வாசிப்பர்.

நிகழ்ச்சியில், சாத்தூராரின் வாழ்க்கை மற்றும், இசைப்பயணத்தைச் சித்திரிக்கும் சுவாரசியமான பவர்பாயிண்ட் காட்சியும், சங்கீத மேதைகளின் நேர்காணல்களும் காண்பிக்கப்படும். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சுப்ரமணியம் அவர்களின் பாணியில் அவர் பாடி பிரபலப்படுத்திய பாடல்களைக் குரு சாந்தி ஸ்ரீராமின் மாணவர்கள் இசைக்க உள்ளனர். மிருதங்க ஆசிரியரும், சிறந்த மிருதங்கக் கலைஞருமாகிய ஸ்ரீராம் பிரும்மானந்தம், அவரது மாணவர்கள், மற்றும் விரிகுடாப்பகுதி கஞ்சிரா வித்வான் திரு. கணேஷ் ராமநாராயணன் ஆகியோர் சேர்ந்து ஒரு லயவின்யாசத்தைச் சமர்ப்பிக்க உள்ளனர். சாத்துரார் சிறந்த மிருதங்கக் கலைஞருமாவார் என்பதால் லயவின்யாசம் பொருத்தமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

சாத்தூரார் பற்றிய முழுக்கட்டுரை வாசிக்க: தென்றல், மே 2016

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com