சான் டியகோ: உலக நடனத் திருவிழா
சான் டியகோ இந்திய அமெரிக்கன் சொசைட்டி "வேற்றுமையில் ஒற்றுமை" என்னும் தலைப்பிலான உலக நடனத் திருவிழா ஒன்றை நடத்தியது. இந்நிகழ்ச்சி 13வது ஆண்டாக நடைபெறுகிறது. "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற கருத்தில் பல்வேறு நடனங்களின் தொகுப்பாக இந்நிகழ்ச்சி இருந்தது. நிகழ்வின் முக்கியக் கருதுகோள் "சகிப்புத்தன்மை மற்றும் அமைதி".

நிகழ்ச்சியைத் திரு. ராம் சேஷன் அவர்களது வழிகாட்டலில், அல்கா ராவ் அவர்கள் சிறப்புற ஒருங்கிணைத்து வழங்கினார். இந்தியா, கொரியா, ஸ்பெயின் போன்ற நாடுகளைப் பின்புலமாகக் கொண்ட சான் டியகோவின் நாட்டியக் கலைஞர்கள் நிகழ்ச்சியைச் சிறப்புற வழங்கினர். பூர்ணிமா கோபகுமார், உமா சுரேஷ், சாராவதி சதே, சுமன் நாயக், ஷாலினி பரம், தேப்யானி சக்ரபர்த்தி, பானி காய், பூஜா தோம்ரே, மீனாள் சக்ரதேவ், லேகா மோதிவாலா, கார்கி சட்டோபாத்யா, கெர்ட்டி ரே, அனார் மேத்தா மற்றும் அன்னி ஹாம் ஆகியோர் வெவ்வேறு நடனங்களை இயக்கி வடிவமைத்திருந்தனர்.

பதினான்கு வகை நடனங்கள்; ஒவ்வொன்றும் ஒற்றுமை, ஒருமைப்பாடு, சகிப்புத்தன்மை, நல்லிணக்கம், வலிமை, நேர்மை, உலக அமைதி, சமாதானம் என்ற கருத்துக்களைச் சிறப்புற விளக்குவதாய் அமைந்திருந்தன. மழையின் சிறப்பை விளக்கும் 'வர்ஷா', இந்திய நடனப் பாணியில் அமைந்திருந்தது; வாழ்க்கையின் உருவாக்கம் மற்றும் சுழற்சியை ஃப்யூஷனில் "ஜோ" என்னும் கிரேக்க பாணி நடனம் காட்டியது. ஃப்ளெமெங்கோ மற்றும் இந்தியப் பாணி கலந்த நடனம், இரண்டு வெவ்வேறு கலாசாரங்கள் ஒன்றிணைந்து புதிய கலாசாரம் உருவாவதை விளக்கியது.

நிகழ்ச்சிக்கு 650க்கும் மேற்பட்டோர் வந்து இறுதிவரை இருந்து ரசித்தனர். காங்கிரஸ்மன் ஸ்காட் பீட்டர்ஸ் சிறப்பு அங்கீகாரச் சான்றிதழை சான் டியகோ இந்திய அமெரிக்க சொசைடிக்கு வழங்கி கௌரவித்தார். ராம் சேஷன் மற்றும் குழு உறுப்பினர்களுக்கு தனது பாராட்டுக்களையும் வழங்கினார். பார்வையாளராகக் கலந்துகொண்ட Waddell & Reed Inc நிறுவன நிதி ஆலோசகர் ரூஹி தாருகர் நிகழ்ச்சியை வெகுவாகப் பாராட்டினார்.

அல்கா ராவ்,
சான் டியகோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com