தெரியுமா?: தமிழ் நாடு அறக்கட்டளை 42வது ஆண்டுவிழா
2016 மே மாதம் 28-29 தேதிகளில் தமிழ் நாடு அறக்கட்டளையின் 42வது ஆண்டு விழா அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் அருகேயுள்ள மேரிலாந்து மாநிலத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் தரமான இயல், இசை, நாடக நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

அமெரிக்கர்கள் பெக்கி டக்ளஸ் மற்றும் ரேச்சல் ஆகியோர் விழாவில் கௌரவிக்கப்படுவார்கள். இந்த இருவரும் தமிழ்நாட்டில் தொழுநோய் உள்ள குழந்தைகளுக்குப் பெரிதும் உதவுகிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல மீட்புப்பணிகளை ஆற்றியுள்ளார்கள்.

தமிழ் நாடு அறக்கட்டளை அமெரிக்காவில் இயங்கும் லாபநோக்கில்லாத சேவைநிறுவனம். இந்த அறக்கட்டளையின் முக்கியநோக்கு "ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்பதாகும்.

அமெரிக்காவில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு ஈகையை விளக்கும் வண்ணம் ஈகைப் பயிலரங்கம் நடத்தப்படும். பாரி வள்ளல், ஓளவை, பேகன், கர்ணன், சீதக்காதி தொடங்கி, அமெரிக்காவின் மிகப்பெரும் தொழிலதிபர் பில் கேட்ஸ்வரை எப்படி உதவுகிறார்கள் என்பதை இந்தப் பயிலரங்கம் விளக்கும்.

விழாவின் இறுதிநாளன்று பிரபல சூப்பர்சிங்கர் அர்ஜுன் அடபள்ளி, தேவன், ரோஷினி ஆகியோர் வழங்கும் மிகப்பெரிய இசைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைமாமணி கிருஷ்ணகுமார் நரேந்திரன்அவர்களின் "முத்தமிழ் முழக்கம்" பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து, முறையாக நடனம் பயின்று அரங்கேற்றம் கண்ட நடனமணிகள் பங்கேற்கிறார்கள்.

ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸ் நாடகக் குழுவினர் "அறுபதிலும் ஆசை வரும்" என்ற நாடகத்தை வழங்குகிறார்கள். இவர்கள் தமது நாடகங்கள் மூலம் இதுவரை $100,000 திரட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.

1974ம் ஆண்டு அமெரிக்காவில், அமெரிக்காவாழ் தமிழர்களால் 'தமிழ் நாடு அறக்கட்டளை' மேரிலாந்தில் உள்ள பால்டிமோரில் தொடங்கப்பட்டது. அறக்கட்டளையின் சேவையைப் புரிந்துகொண்டு முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். சென்னையில் அரசு நிலத்தை அன்றைய நிர்ணய விலையில் அறக்கட்டளை தலைவர் பழனி பெரியசாமியிடம் வழங்கினார்.

தமிழ் நாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்; நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை அடிவார கிராமங்கள்; சிவகங்கை மாவட்டத்தில் பாரிவள்ளல் வாழ்ந்த பிரான்மலை அடிவார கிராமங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்விசார்ந்த உதவிகளை அறக்கட்டளை செய்கிறது. குறிப்பாக வடுகபட்டியில் உள்ள குடுகுடுப்பைத் தொழில்செய்வோர் குடும்பப் பிள்ளைகளுக்கும் கல்வி புகட்டுகிறது தமிழ் நாடு அறக்கட்டளை தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்விப்பணிக்கெனப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச்செய்துகொண்டுள்ளது. அறக்கடளையின் ABC கல்வித்திட்டம் சிவகங்கை, வேலூர், கடலூர், நாமக்கல், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளிகளில் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு மென்திறன் பயிற்சி, கல்லூரி அறிமுக நிகழ்ச்சி போன்ற புதிய முயற்சிகளின் மூலம் அவர்களின் எதிர்காலத்துக்கும் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது. இக்கல்வித் திட்டத்தை தமிழகத்தின் 32 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

தமிழ் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கிட்டதட்ட 4 கோடி ரூபாய் நிதியை அமெரிக்காவிலுள்ள தமிழ்ச் சங்கங்கள் மற்றும் இந்திய அமைப்புகளோடு சேர்ந்து அறக்கட்டளை திரட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரிடையாக உதவிகளைச் செய்துவருகிறது.

மேலும் விவரங்களுக்கு tnfusa.org இணையதளத்தைப் பார்க்கலாம். அல்லது தலைவர் திரு சிவசைலம் அவர்களோடு 443.812.6794; 703.554.7444 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com