குறள்நாயகி பிரசன்னா சச்சிதானந்தன்
மின்னசோட்டா தமிழ் ஆர்வலர்கள் ஜனவரி 24, 2016 அன்று மதியம் ஏதோ பெரிய சாதனை ஒன்று நம் கண்முன்னர் நடக்க இருக்கிறது என்று ஆர்வத்தில் இருந்தனர். ஒன்றே முக்கால் அடியில் உலகத்துக்கே வாழ்வியலைக் காட்டிய திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தையும் ஒன்றே முக்கால் மணித்துளியில் சுவைபட விளக்கமுடியும் என்று நிரூபித்தார் திருமதி. பிரசன்னா சச்சிதானந்தன்.

மின்னசோட்டா தமிழ்ச்சங்கம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. நண்பகல் 12:05 மணிக்குத் தொடங்கி இடைவெளி விடாது 1330 குறட்பாக்களையும், பொருளையும் வரிசைமாறாமல் கூறினார். வந்திருந்த அனைவரின் கையிலும் திருக்குறள் புத்தகம் இருந்தது. ஒருநிமிடம் கவனம் சிதறினால்கூட, மீண்டும் பிரசன்னாவைப் பின்பற்றிக் குறளைத் தேட ஒரு பக்கம் திருப்பவேண்டி இருந்தது. அந்த அளவு கவனம் பிசகாமல் மூன்று மணிநேரம் 52 நிமிடங்களில் மொத்தத் குறட்பாக்களையும் கூறிப் பொருளையும் விளக்கினார். அழகியல் சார்ந்த குறள்களை நயம்பட விளக்கியது ரசிக்கும்படி இருந்தது.

பாராட்டிப் பேச நா எழாமல் கண் கலங்கிய தமிழ் ஆர்வலர்களை அத்தனை நெகிழவைத்த பெருமை பிரசன்னாவையே சேரும். இறுதியில் பேசியபொழுது பிரசன்னா "இன்றைய பொழுதை என் வாழ்நாளில் மறக்கமுடியாது" என்று கூறியபொழுது, அங்கிருந்த அனைவரும் அப்படியே உணர்ந்தனர் என்பதை அவர்கள் கரவொலி காட்டியது.

லெட்சுமி சுப்பு,
மின்னசோட்டா

© TamilOnline.com