பாரதி தமிழ்க்கல்வி: பொங்கல் விழா
ஜனவரி 17, 2016 அன்று செரீட்டோஸில் (கலிஃபோர்னியா) உள்ள பாரதி தமிழ்க்கல்வி பள்ளி பொங்கல் விழா மற்றும் தமிழ்ப் பாடநூல் வெளியீட்டு விழாவை ஜோ ஏ. கொன்சால்வஸ் ஆரம்பப்பள்ளி அரங்கத்தில் நடத்தியது. மங்கல இசை, தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் நாட்டுப்பற்று உறுதிமொழியுடன் விழா ஆரம்பமானது.

செரிட்டோஸ் நகர்மன்ற உறுப்பினர் திரு. நரேஷ் சோலங்கி, ஆர்டீசியா மேயர் (பொறுப்பு) திரு. அலி சஜ்ஜத், கொன்சால்வஸ் பள்ளி முதல்வர் திரு. ராபர்ட் பென்கோ, கலைவாணர் திரு. என்.எஸ் கிருஷ்ணனின் மகள் திருமதி. கஸ்தூரி, மருமகன் திரு. நவனீதகிருஷ்ணன், தென்கலிபோர்னியா பகுதியில் இசை மற்றும் தமிழ்க்கலை சேவை செய்துவரும் திருமதி. ரோஸ் முரளிகிருஷ்ணன், அவரது கணவர் திரு. முரளிகிருஷ்ணன் மற்றும் இர்வைன் தமிழ்ப்பள்ளி முதல்வர் திரு. ஜீவன் ஆகியோர் விழாவுக்கு வருகைதந்து சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினர்களை வரவேற்றுப் பேசிய பாரதி தமிழ்க்கல்வி நிர்வாகத் தலைவர் திரு. பாலா இசக்கிநாதன், பள்ளி ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தையும், ஆற்றிவரும் பணியினையும் விளக்கினார்.

பள்ளிமுதல்வர் திரு. பாபநாச வீரபாகு அவர்களோடு பள்ளி ஆசிரியப் பெருமக்கள் வகுத்த புதிய பாடத்திட்டத்தில் அமைந்த புத்தகத்தை அலி சஜ்ஜத் மற்றும் நரேஷ் சோலங்கி வெளியிட ராபர்ட் பென்கோ பெற்றுக்கொண்டார். செயலர் திரு. பாலாஜி மற்றும் பொருளாளர் திரு. குரு உடனிருந்தனர்.

நரேஷ் சோலங்கி மற்றும் அலி சஜ்ஜத் ஆகியோர் தமது உரையில் பள்ளியின் வளர்ச்சிக்குத் துணை நிற்பதாக உறுதியளித்தனர். கஸ்தூரி மற்றும் நவனீதகிருஷ்ணன் பேசுகையில் கலைவாணர் அவர்கள் இளம் மாணவர்களுக்கு எப்படி நகைச்சுவையாக அறிவுரை கூறுவார் எனத் தமது நினைவுகளைப் பகிர்ந்தனர். ரோஸ் முரளிகிருஷ்ணன், குழந்தைகளுடன் உரையாடி தமிழ்மொழி கற்பதன் சிறப்புகளை உணரவைத்தார்.

பள்ளி மாணவ மாணவியரின் யோகா நடனம், திருக்குறள் பற்றிய சிறப்புரை, கலைநிகழ்ச்சிகள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. மாணவி செல்வி. த்ரிஷா இயக்கிய மாணவர் மற்றும் பெற்றோர்களின் நேர்காணல் காணொளி, பள்ளியின் உயரிய நோக்கத்தையும், நிர்வாகிகளின் தொலைநோக்குப் பார்வையையும் எடுத்துரைத்தது. திருமதி. சுனிதா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஆசிரியை திருமதி. விசாகலட்சுமி நன்றி கூறினார்.

பள்ளியைப்பற்றி அறிந்துகொள்ள: barathithamizh.org

மணிவண்ணன் ஜெயராமன்,
செரீட்டோஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com