நூல்கோல் மசாலா
தேவையான பொருட்கள்
நூல்கோல் (சுமாரான அளவு) - 3
பெரிய வெங்காயம் - 4
மிளகாய் வற்றல் - 2 அல்லது 3
பச்சைக் கொத்துமல்லி - 1 கட்டு
மஞ்சள்பொடி - ஒரு சிட்டிகை
கொத்துமல்லி விதை - 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 கரண்டி (தாளிக்க)
கடுகு - சிறிதளவு (தாளிக்க)
கடலைப்பருப்பு - சிறிதளவு (தாளிக்க)
கறிவேப்பிலை - சிறிதளவு (தாளிக்க)

செய்முறை
தனியா, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் இவற்றைத் தண்ணீரில் ஊறவைக்கவும். நூல்கோல், வெங்காயம் இரண்டையும் தோல் உரித்துப் பொடியாக நறுக்கி தனித்தனியாக வேகவைக்கவும். பச்சைக் கொத்துமல்லியை ஆய்ந்து கழுவிவைக்கவும்.

முதலில் நூல்கோலை ஒரு கனமான பாத்திரத்தில் மஞ்சள் பொடி போட்டு, அளவான தண்ணீரில் வேகவைக்கவும். (குக்கரிலும் வேகவைக்கலாம்). நூல்கோல் வெந்ததும் இறக்கிவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தையும் போட்டுச் சுருள வதக்கிக்கொள்ளவும். வெந்த நூல்கோலை அதில் கொட்டி (ஊறப்போட்ட தனியா, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றலை அரைத்து, விழுதையும் கொட்டி) உப்பு, கொத்தமல்லி போட்டு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இதைப் பூரி, சப்பாத்தி, சாதம் எல்லாவற்றிற்கும் தொட்டுக் கொள்ளலாம். தோசைக்குள் வைத்து வார்த்தால் மசாலா தோசைதான். உருளைக்கிழங்கு சேர்க்க முடியாதவர்கள் இதைச் சாப்பிடலாம்.

வசந்தா வீரராகவன்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com