GOD: 'கிருஷ்ணானுபவம்'
டிசம்பர் 13, 2016 அன்று Global organization for Divinity (GOD) அமைப்பிற்காக நிருத்யோல்லாசா நாட்டியப்பள்ளி, CET SOTO அரங்கில் 'கிருஷ்ணானுபவம்' நாட்டிய நிகழ்ச்சியை வழங்கியது. ஸ்ரீ முரளிதர சுவாமிகளை வழிகாட்டியாகக் கொண்ட தன்னார்வத் தொண்டு நிறுவனம். புராதனக் கோவில்களைப் புதுப்பித்தல், வேதபாடசாலைகளைப் பராமரித்தல், கிராமப்புறப் பகுதிகளில் கண், நீரிழிவுநோய், புற்றுநோய் ஆகியவற்றுக்குப் பரிசோதனை செய்து, மருத்துவ உதவிகளை வழங்குதல் ஆகியவற்றைச் செய்துவருகிறது. இந்நோய்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. பசுக்களைச் சுகாதாரமாகப் பாதுகாத்து வருகின்றது. இந்த அமைப்புக்கு நிதி திரட்டிக் கொடுக்கும் பொருட்டு விரிகுடாப் பகுதியின் நிருத்யோல்லாசா நிறுவனரும் நடன ஆசிரியருமான திருமதி. இந்துமதி கணேஷ் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்து வழங்கினார்.

கண்ணனின் குறும்பில் ஹாஸ்யம், பிரபஞ்சத்தைத் வாயில் காட்டித் தாயை பிரமிக்கச் செய்கையில் அற்புதம், காளிங்க நடனத்தில் வீரம், கோபியர் கொஞ்சுகையில் சிருங்காரம், பாஞ்சாலியின் மானம் காத்தபோது காருண்யம் என அற்புதமாக நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தனர் இந்துமதி மற்றும் அக்‌ஷயா கணேஷ்.

இந்துமதி தன் மாணவியரோடு சேர்ந்து ஆடியதும், பற்பல பாத்திரங்களில் தோன்றி எல்லா ரசங்களையும் வெளிப்படுத்தியதும் நன்றாக இருந்தது. அக்‌ஷயாவின் நடனத்திலிருந்த துள்ளலும் குறும்பும் கண்ணன் பாத்திரத்திற்குப் பொருத்தமாக அமைந்தது. அனைத்து மாணவியரும் சிறப்பாக ஆடினர். சிறப்பாகப் பக்கம் வாசித்தவர் பின்வருமாறு: மிருதங்கம் செல்வன். ஆதித்யா கணேஷ், வாய்பாட்டு செல்வி. ரூபா மகாதேவன், மோர்சிங் திரு. மகாதேவன், வயலின் செல்வி. ஸ்ருதி சாரதி, புல்லாங்குழல் திரு. அஷ்வின் கிருஷ்ணகுமார்.

நித்யவதி சுந்தரேஷ்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com