அரங்கேற்றம்: ஓவியா பாலகிருஷ்ணன்
டிசம்பர் 26, 2015 அன்று ஃபால்சம், கலிஃபோர்னியாவில் குரு திருமதி. மீனாட்சி பாஸ்கரின் மாணவியும், திருமதி. அனிதா, திரு. பாலகிருஷ்ணனின் புதல்வியுமான செல்வி. ஓவியா பாலகிருஷ்ணனின் நடனம் அரங்கேறியது. திருமதி நீரஜாவின் கணீர் குரலில் “அற்புத நர்த்தனம் ஆடும்” என்ற இறை வணக்கத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து பஞ்ச மூர்த்தி அஞ்சலியாகப் பாடிய கம்பீரநாட்டைப் பாடலுக்கு மிடுக்காக அரங்கத்தில் தோன்றி நடனம் ஆடினார் ஓவியா. பின்னர் அலாரிப்பும், சாவேரியில் ஜதீஸ்வரமும் ஆடினார். அடுத்து ஆடிய ஹம்ஸத்வனி ராக “கருணைக் கடலே” என்ற பதத்தில் கணபதியைப் பணிந்தார். தன்யாசி ராக வர்ணமான “நீ இந்த மாயம் செய்தால்” என்ற பாடலுக்கு ஆடுமுன் சபையோருக்கு அபிநயத்தின் மூலம் விளக்கிக் காட்டியது ரசிகர்களுக்கு உறுதுணையாக இருந்தது. நிகழ்ச்சிக்கு குருவின் நட்டுவாங்கமும் திரு. ஹரியின் மிருதங்கமும் பக்கபலமாக இருந்தன.

இடைவேளைக்குப் பின் புன்னாகவராளியில் “நாதர்முடி மேல் இருக்கும் நாகப்பாம்பே” பாடலுக்கு ராஜநாகத்தின் வளைவு நெளிவுகளைக் கண்முன் நிறுத்தினார். தொடர்ந்து குரு மீனாட்சியின் தாயாரும், குருவுமான திருமதி. சாந்தா பாஸ்கரின் நடன அமைப்பில் செஞ்சுருட்டி ராகத்தில் “கண்ணன் வருகின்ற நேரம்” பாடலுக்கு ஒய்யாரமாக அசைந்தாடினார். திரு. சச்சித்தின் வயலினும், திரு. அஸ்வினின் புல்லாங்குழல் இசையும் நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தன. அடுத்து கமாஸில் “இடதுபதம் தூக்கி ஆடும்” பதத்துக்கு நடனசபாபதியின் நர்த்தனத்தைத் திறம்பட ஆடினார். பிரபலமான “வள்ளிக்கணவன் பேரை” பாடலுக்கு ஓவியாவின் அபிநயம் அற்புதம். இறுதியாகத் திலங்ராகத் தில்லானா நிகழ்ச்சிக்குத் சிகரம் வைத்தாற்போல அமைந்தது. திருமதி. ஸ்ரீப்ரியா அருமையாகத் தொகுத்தளித்தார்.

கிருஷ்ணா சுகந்தராஜ்,
ஃபால்சம், கலிஃபோர்னியா

© TamilOnline.com