அஞ்சனா, கல்பனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்
செப்டம்பர் 10, 2005 அன்று அஞ்சனா சுந்தரம், கல்பனா சுந்தரம் இரட்டையரின் பரதநாட்டிய அரங்கேற்றம் சான் ஹோஸோவின் மெக்சிகன் ஹெரிடேஜ் பிளாசா அரங்கத்தில் நடைபெற்றது.

அபிநயா நாட்டிய அமைப்பின் நிறுவனரான மைதிலி குமாரிடம் இருவரும் பத்து ஆண்டுகளாக நடனம் பயின்று வருகிறார்கள். இருவரும் அபிநயாவின் நாட்டிய மகோத் சவத்தில் முன்னர் பங்கு பெற்றுள்ளனர். இது தவிர மேலைநாட்டுச் சங்கீதத்திலும் இவர்களுக்குத் தேர்ச்சி உண்டு.

ஆஷா ரமேஷ் பாடிய வினாயகர் மீதான பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. புஷ்பாஞ்சலிக்குப் பிறகு சகோதரிகள் ஷண்முகப்ரியா ராகத்தில் அமைந்த மஹாவிஷ்ணுவைப் போற்றும் ஒரு பாடலுக்கு அழகாக நடனமாடினர்.

அடுத்துவந்த ஜதிஸ்வரத்தில் தோடி ராகப் பாடலுக்குச் செம்மையாக நடனமாடி, தேர்ச்சி பெற்ற தாளக்கட்டையும் அபிநயத் தையும் காண்போர் கண்முன் நிறுத்தினர்.

அடுத்து வயலின் மேதை லால்குடி ஜெயராமன் சாருகேசி ராகத்தில் அமைத்த வர்ணத்திற்கு நடனமாடினர்.

சகோதரிகள் இருவரும் வெகு அருமையாக ஒருமித்துப் பதம்பிடித்து, தங்களது திறமை யையும், கற்பனா சக்தியையும் வெளிப் படுத்தினர். ஸ்ரீ கிருஷ்ண பகவானின் லீலைகளை அபிநயம் பிடித்து நம் கண் முன்னே கொண்டு நிறுத்தி சபையோரின் ஏகமனதான பாராட்டைப் பெற்றனர்.

இடைவேளைக்குப் பிறகு, நாககாந்தாரி ராகத்தில் அமைந்த முத்துஸ்வாமி தீட்சதரின் 'சரஸிஜ நாப சோதரி' என்ற பாடலுக்கு கல்பனா தனி நடனமாடினார். மஹிஷா சுரனை வதைத்த பார்வதியின் ரெளத்ரத் தையும், பிறகு தேவியைத் தஞ்சம் அடைந்த வர்களை வாஞ்சையுடன் பரிபாலித்த விதத்தையும் மாற்றி மாற்றித் தன் அபிநயம் மூலம் கொண்டு நிறுத்தி பார்த்தோரைப் பரவசப்படுத்தினார்.

வசந்தா ராகத்தில் 'நடனமாடினார்' என்ற கோபாலகிருஷ்ண பாரதியின் புகழ்பெற்ற பாடலுக்கு இருவரும் தில்லை நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை ஆடிக் காண் பித்தனர். அடுத்து அமரர் கல்கியின் 'மாலைப்பொழுதினிலே' என்ற ராக மாலிகைப் பாடலுக்கு அஞ்சனா தனி நடனமாடி, ஒரு மங்கையின் கனவையும் அதில் அவள் முருகப்பெருமானைச் சந்திப்பதையும் கனவு கலைந்து வருத்த மடைவதையும் அழகாகச் சித்தரித்து பாராட்டைப் பெற்றார்.

நிறைவாக, சகோதரிகள் அம்ருதவர்ஷிணி ராகத் தில்லானாவிற்கு துரிதமாக நடனமாடி நிகழ்ச்சியை இனிதே முடித்தனர். மைதிலி குமாரின் நட்டுவாங்கமும், ஆஷா ரமேஷின் இனிய பாட்டும் நிகழ்ச்சிக்கு மெருகு ஊட்டின.

வயலின் வாசித்த சாந்தி நாராயணனும், மிருதங்க வித்வான் என். நாராயணனும் பாராட்டுக்குரியவர்கள்.

திருநெல்வேலி விஸ்வநாதன்

© TamilOnline.com