அபிநயா: 'நிருத்யதாரா'
டிசம்பர் 6, 2015 அன்று அபிநயா டான்ஸ் கம்பெனியின் 35வது ஆண்டுவிழா நிகழ்ச்சியான 'நிருத்யதாரா' சான்ட க்ளாரா யுனிவர்சிடி லூயிஸ் பி மேயர் தியேட்டரில் நடைபெற்றது. அபிநயாவின் இயக்குநர் திருமதி. மைதிலி குமார் அவர்களது மாணவியர் இந்நிகழ்ச்சியை வழங்கினர்.

கணபதி வந்தனத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. வசந்த காலத்தில் மன்மத பாணத்தினால் ஏற்படும் உணர்வுகளை வசந்தாராகப் பாடலில் மாணவியர் நாட்டியத்தில் வடித்தது மனதை வசப்படுத்தியது. அடுத்து நள-தமயந்தி காதல்விடு தூது மதுவந்தி ராகப் பாடலுக்கு, அபிநயம், கண்ணசைவு, முகபாவம் மூலம் இரு மாணவிகள் அளித்தது அருமை. ஆண்டாள் அருளிய 'நாச்சியார் திருமொழி'யிலிருந்து, "தோகை விரிக்கின்ற மாமயிலைக் காணேன்", "மானே உருவாய் வந்த மாயனே" போன்ற பாடல்களுக்கு ஆடியவிதம் சிறப்பு. தொடர்ந்த ராஸக்ரீடை வர்ணனை தில்லானாவில் "யமுனாதீர விஹாரா" என்னும் யமுனா நதிக்கரையில் கண்ணனுடன் நடனமாடிய கோபியர்களைக் கண்முன் கொண்டு நிறுத்தினர். முடிவில் பிருத்வி ஸூக்தத்துக்கு பலவகை இயற்கை நிகழ்ச்சிகளை ஆடி அசத்தினர். பலத்த கை தட்டலுடன் "விஸ்வம்பரா, ஸர்வம் ஸதா" என முடித்தவிதம் பிரமாதம்.

பின்னணியில் திருமதி. ஆஷா ரமேஷ் குரலிசை பாட, பல விரிகுடாப்பகுதிக் கலைஞர்கள் கருவிகளை வாசித்தனர்.

சீதா துரைராஜ்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com