கற்பனையல்ல: டுகூன் கண்டுபிடித்த உடல்
'இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கிறது அம்மா! பொது அடக்கத்திற்குப் பிணங்களை எடுத்துச் செல்ல மற்ற உறவினர்கள் எல்லாரும் காத்திருக்கிறார்கள். சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாருங்கள். பதினோரு மணிக்குப் புறப்பட வேண்டும்' என்று மீண்டும் வலியுறுத்தினார் அந்த அதிகாரி.

'ஜகார்தாவிலிருந்து டுகூன் (மாந்த்ரீகர்) வருவதற்குக் காத்திருக்கிறோம் ஐயா. சற்றுப் பொறுங்கள். இதோ வந்து விடுவார்' என்று அழுகையினூடே வேண்டினாள் எங்கேஹ¤வா.

'என்னக்கா, அப்பாதான் எங்கேயோ ஜாவாவிலிருந்து டுகூனைக் கூட்டி வந்து பார்த்து விடுவோம் என்று சொன்னாலும் எனக்கு நம்பிக்கை இல்லை அக்கா!' என்றான் அவள் தம்பி.

'கொஞ்சம் பொறு தம்பி! அதையும் கடைசியாய்ப் பார்த்து விடலாம்' என்றார் உள்ளூர் அங்ஸாபுர விஹாரத்திலிருந்து வந்திருந்த புத்தபிக்கு.

எதிரே வரிசையாய்ப் பெட்டிகள். அவற்றுள் முந்தாநாள் நடந்த விமான விபத்தில் அடையாளம் காண முடியாமல் கருகிய பிணங்கள். இரு தினங்களாய் எவ்வளவோ முயன்றும் நெருங்கிய உறவினர்களால் கூட அவற்றைப் பிரித்து அடையாளம் காட்ட முடியவில்லை.

எங்கேஹ¤வா, நான்கைந்து பெட்டிகளுக்கு மேல் தொடர முடியாமல் கதறி நின்று விட்டாள். ஆனாலும் இதில் ஏதோ ஒரு பெட்டியில் அவள் கணவன் உடல் இருப்பது நிச்சயம். அதற்கு அவர்களின் பௌத்தமத நம்பிக்கைப்படியே இறுதி மரியாதைச் சடங்குகள் நடக்க வேண்டும். அதுவே நடக்காது போலிருக்கிறது.

தொலைபேசியதில் விவரம் அறிந்த அவள் தந்தை, டுகூன் ஒருவரை அழைத்துக் கொண்டு காலை விமானத்தில் வருவதாகச் சொல்ல, அதையும் பார்த்து விடுவோம் என்று காத்திருக்கிறார்கள்.

'இதோ அப்பா' என்றான் தம்பி. பின்னால் பைய நடந்து வந்தார் அந்த டுகூன். சுமார் எழுபது வயதிருக்கலாம். வித்தியாசம் சொல்ல முடியாத ஜாவானிய முகம் என்றாலும் கண்களில் தனி ஒளி.

'இந்தப் பெட்டிகள்தாம் ஐயா' என்று சுட்டிய திசை நோக்கி நடந்து சில நிமிடங்கள் கண்களை மூடி நின்றார் அந்த டுகூன்.

பின்னர் 'இதுதான். திறந்து பாருங்கள்!' என்று அவர் காட்டிய பெட்டியைத் திறக்க, அந்த சாம்பல் குவியலைக் கண்டு வெடித்தாள் எங்கேஹ¤வா.

கருகிய நிலையிலும் அந்த மேட்டு நெற்றி; கைகளால் அள்ளி எடுக்க, முற்றாய்க் கருகாத பின்னிடுப்பில் ஒட்டியிருந்த அந்த 'ஜிடிமான்' அண்டர்வேர் துணுக்கு! எங்கேஹ¤வாவின் அலறல் மருத்துவமனையையே கலங்க வைத்தது. அப்பா ஓடிப்போய் அவளைக் கட்டிக் கொண்டார்.

தம்பி கலங்கித் திகைத்து நின்றான். எப்படி இது சாத்தியம்!

'நீங்கள்தானே ஒய்செகியாவின் மைத்துனர் ஐலொன்?' என்றவாறு அந்த டுகூன் அவனை நோக்கி வந்தார்.

'ஆம் ஐயா!'

'சற்றுமுன் பேசிய போது ஒய்செகியா உங்களிடம் ஒரு விஷயத்தை ஞாபகப் படுத்தச் சொன்னார். சென்ற வாரம் அவர் ஜகார்தாவை விட்டுக் கிளம்புகையில், அவரின் இரண்டு மகன்களையும் பொறுப்பாய்ப் பார்த்துக் கொள்ளுமாறு உங்களிடம் சொன்னாராம். அதை இனி எப்போதும் மறந்துவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்' என்று சொல்லி அவன் தோளில் தட்டி விட்டு, மேலே எதுவும் பேசாமல் பைய நகர்ந்து சென்றார் அந்த டுகூன்.

செப்டம்பர் 5, 2005 அன்று நாள், திங்கள் கிழமை, மேடானில், பொலெனியா விமானதளத்தை விட்டுப் புறப்பட்ட சில நிமிடங்களில், மண்டலா நிறுவனத்தைச் சேர்ந்த போயிங் 737 விமானம் ஒன்று விழுந்து கருகியதில் 150 பேர் மாண்டனர். அதில் ஒருவர்தான் இந்த ஒய்செகியா. சீனர். தொழிலதிபர்.

மேற்சொன்ன சம்பவம் நிகழ்ந்தது புதனன்று. வியாழக்கிழமை அவரின் இறுதிச் சடங்குகள் ஜகார்தாவில் நடைபெற்றன.

ஜாவா குமார்,
இந்தோனேசியா

© TamilOnline.com