மனோரமா
ரசிகர்களால் 'ஆச்சி' என்று அழைக்கப்பட்டவரும், ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை புரிந்தவருமான நடிகை மனோரமா (78) சென்னையில் காலமானார். மன்னார்குடியில் மே 26,1937 நாளன்று பிறந்த இவரது இயற்பெயர் கோபிசாந்தா. செட்டிநாட்டுப் பகுதியான பள்ளத்தூரில் குடியேறிய இவர் ஆரம்பத்தில் சிறுசிறு நாடகங்களில் நடித்தார். அண்ணா, கருணாநிதி உள்பட பலருடன் மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் மிக்க இவரைக் கண்ணதாசன் 'மாலையிட்ட மங்கை' படத்தில் கதாநாயகியாகத் திரையுலகில் அறிமுகப்படுத்தினார். ஆனால் பின்னர் நகைச்சுவை வேடங்களை அதிகம் செய்தார். நடிப்பில் மெருகேறிய மனோரமா பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் ஒளிர்ந்தார். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் என ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை இவருக்குண்டு. அன்றைய மகாலிங்கம்முதல் இன்றைய சூர்யாவரை ஐந்து தலைமுறை நடிகர்களுடன் நடித்திருக்கிறார். சென்னைத் தமிழ், கொங்குத் தமிழ், செட்டிநாட்டுத் தமிழ், பிராமணத் தமிழ் என்று பலவித வழக்கு மொழிகளிலும் திறம்படப் பேசி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சிங்களம் என ஆறு மொழிப் படங்களில் நடித்தவர். சொந்தக்குரலில் பல பாடல்களைப் பாடியுள்ளார். வாழ்நாள் சாதனையாளருக்கான ஃபிலிம்ஃபேர் விருது, பத்மஸ்ரீ, சிறந்த நடிப்பிற்கான தேசியவிருது உட்படப் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இவர் அக்டோபர் 10, 2015 அன்று இரவு காலமானார். ஆச்சிக்குத் தென்றலின் அஞ்சலி!



© TamilOnline.com